இஞ்சி மருத்துவம்
இஞ்சி மருத்துவம்
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும்.
பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள்.
பெயர்த் தோற்றம்
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல், சுவறுதல் அல்லது உறிஞ்சுதல் எனப்பொருள். இஞ்சி என்றால் கோட்டை மதில் என்றும் பெயர். இவற்றில் இருந்து பெயர் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.இலத்தின் பெயரான Zingiber தமிழ் மற்றும் மலையாளச் சொற்களான இஞ்சி + வேர் என்பவற்றில் இருந்து தோன்றி இருக்கலாம்.
Zingi (இஞ்சி) + ber (வேர்)
வேறு பெயர்கள்
அல்லம், ஆசுரம், ஆத்திரகம், ஆர்த்திரகம், கடுவங்கம்உலர்ந்த இஞ்சி: சுக்கு, வேர்க்கொம்பு, சுச்சு
கண்டாத்திரிலேகியம் என்பது இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இலேகியம் ஆகும்.
இஞ்சியின் பொதுவான குணங்கள்
இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது.இலைப்பகுதி உலர்ந்ததும் இஞ்சியின் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.
உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும்.(?) அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
சத்துப் பொருட்கள்
100 கிராம் இஞ்சிப் பொடியில் | 100 கிராம் பச்சை இஞ்சியில் | ||||
மாப்பொருள் | 71.62 g | 17.77 g | |||
புரதம் | 8.98 g | 1.82 g | |||
கொழுப்பு | 4.24 g | 0.75 g | |||
உயிர்ச்சத்துகள் | |||||
தயமின் (உச பி1) | 0.046 mg | 4% | 0.025 mg | 2% | |
இரைபோஃப்ளேவின் | 0.17 mg | 14% | 0.034 mg | 3% | |
நியாசின் | 9.62 mg | 64% | 0.75 mg | 5% | |
உயிர்ச்சத்து பி6 | 0.626 mg | 48% | 0.16 mg | 12% | |
போலிக் அமிலம் | 13 μg | 3% | 11 μg | 3% | |
உயிர்ச்சத்து சி | 0.7 mg | 1% | 5 mg | 6% | |
உயிர்ச்சத்து ஈ | 0.0 mg | 0% | 0.26 mg | 2% | |
தாதுக்கள் | |||||
கல்சியம் | 114 mg | 11% | 16 mg | 2% | |
இரும்பு | 19.8 mg | 152% | 0.6 mg | 5% | |
மக்னீசியம் | 214 m | 60% | 43 mg | 12% | |
மாங்கனீசு | 33.3 mg | 1586% | 0.229 mg | 11% | |
நாகம் | 3.64 mg | 38% | 0.34 mg | 4% | |
பொசுபரசு | 168 mg | 24% | 34 mg | 5% | |
சோடியம் | 27 mg | 2% | 13 mg | 4% | |
பொட்டாசியம் | 1320 mg | 28% | 415 mg | 9% |
இஞ்சியில் உள்ள வேதிப்பொருட்கள், ஆய்வுகள்
இஞ்சியின் நறுமணத்திற்கு அதில் காணப்படும் சிஞ்செரோன் (zingerone), சோகவோல் (shogaols), மற்றும் சிஞ்செரோல் (gingerols) ஆகியன காரணமாகும். ஆய்வுகூட விலங்குகளில் சிஞ்செரோல் உணவுக்குழலியத் தொகுதியின் சுயாதீன அசைவைக் கூட்டுகிறது. மேலும் வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாகவும் நுண்கிருமி கொல்லியாகவும் உள்ளதென்பதை ஆய்வுகூட விலங்குகளில் உறுதி செய்துள்ளனர். (1)அமெரிக்க புற்றுநோய் மையத்தின் கூற்றின் படி இஞ்சி ஒரு புற்றுநோய் தீர்க்கவல்ல மருந்தாக கருதப்படுகின்றது, புற்றுநோய்க் கலங்கள் பெருக விடாமல் தடுக்கும் இயல்பு உடையது என்றும் ஆனால் இதனை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. அண்மைய ஆய்வுகளில் விலங்குகளில் ஏற்பட்ட புற்றுநோயை மேலும் வளர விடாமல் தடுக்க வல்லது என்று அறிந்துள்ளனர். எனினும் இதற்குரிய காரணங்கள், ஆய்வு முடிவுகள் போன்றவற்றிற்கு இன்னமும் உரிய விளக்கங்கள் கிடைக்கவில்லை. எனவே மேலும் ஆய்வுகளும் படிப்புகளும் தொடர்கின்றன. மனிதரிலும் விலங்குகளைப் போன்று இஞ்சி புற்றுநோயைத் தடுக்குமா என்பது ஆய்வின் முடிவிலேயே தெரியவரலாம்.
தசையில் ஏற்படும் தசைப்பிடிப்பு வலிகளையும் இஞ்சி போக்க வல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (2)
சில மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில், பயணப்பிணியில் மற்றும் மசக்கையில் ஏற்படும் குமட்டலையும் அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படக்கூடிய குமட்டலையும் போக்க வல்லது என்று தெரியவந்துள்ளது. எனினும் இவை இன்னமும் முற்றுபெற்ற ஆய்வுகளல்ல. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சி உபயோகிப்பதில் முரண்பாடான தகவல்கள் உள்ளன. இஞ்சி மரபணு விகாரத்தைத் தோற்றுவிக்கும் என்று சில ஆய்வுகளும் சில அப்படியல்ல என்றும் தெரிவிக்கின்றன. எனவே இன்னமும் இஞ்சி பற்றிய சரியான ஆய்வுகள் இல்லை.
சிஞ்செரோல் (gingerols) ஒரு அழற்சி நீக்கியாக செயற்படுகின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூட்டு வதம், மொழி வாதம் போன்றவற்றால் ஏற்படும் வலி தொடர்ச்சியாக இஞ்சியை பயன்படுத்தி வந்தால் தீரும் என்று அறியப்படுகின்றது.எனினும் மேலே கூறியது போன்று, இவற்றை உறுதிப்படுத்த இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
ஆய்வுகூடத்தில் நடாத்தப்பட்ட சோதனையில் சூலகப் புற்றுநோய்க் கலங்களை இஞ்சி அழித்துள்ளது. (3)
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
பொதுவாக செரிமானம் தொடர்பான வயிற்று வலிகள், பயணப்பிணியால் ஏற்படும் குமட்டல், பசியின்மையைப் போக்கல், இருமல் போன்ற சுவாச நோய்கள், மூட்டுவலி போன்றனவற்றில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி உதவுகின்றது. இவை தொன்றுதொட்டு உபயோகத்தில் இருக்கும் இஞ்சியின் மருத்துவப் பண்புகள் ஆகும்.நாட்டு மருத்துவத்தில் இஞ்சியைப் பல்வேறு நோய்களைத் தீர்க்கவல்ல மூலிகையாகக் கருதுகின்றனர். இவை செவி வழிவந்த தகவல் எனினும் பல உபாதைகளை இஞ்சி தீர்க்கின்றது என்பது பலர் கண்டறிந்த உண்மை. இங்கு கீழே பட்டியலிப்பட்டவை இஞ்சியின் சில மருத்துவ குணங்கள் ஆகும்.
- குமட்டல், வாந்தி: இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியனவற்றை தேனுடன் கலந்து ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது கொடுத்துவர குமட்டல், வாந்தி நீங்கும். சுட்ட இஞ்சியும் பித்த கப நோய்களைத் தீர்க்கும்.
- தோல் வியாதிகள்: உலர் சருமம், சிரங்கு
- செரிமானம்: இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அகற்றி உடலுக்குப் புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் இஞ்சிச் சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரையும்.
- இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
- இதய நோய்: குருதிக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கவல்லது என்று நம்பப்படுகின்றது. இதன் மூலம் இஞ்சியானது மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் ஒரு மூலிகையாக விளங்குகின்றது.
- இஞ்சிச் சாற்றுடன், வெங்காயச் சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.(?)
- இஞ்சியைத் தேனீரில் கலந்து குடிப்பதும் ஒரு பயன்தரும் முறையாகும்.
இஞ்சிச் சொரசம்
நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும். (3)போதுமான அளவு
போதுமான அளவில் நாள்தோறும் உட்கொண்டால் இஞ்சியினால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. எனினும் சில குருதி உறைதல் தடுப்பு மருந்துகளான வார்பரினுடன் (warfarin) இடைத்தாக்கம் புரிகின்றது என்று அறியப்பட்டுள்ளது. இஞ்சியை அதிகமாக உண்டால் தொண்டையில் உபாதை ஏற்படும்.இஞ்சிப் பொடியை அதிகளவில் உட்கொண்டால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். நெஞ்செரிவு, வாயு உபாதை போன்றன ஏற்படலாம். மாத்திரை வடிவிலான இஞ்சி குருதி அழுத்தம், இதயத்துடிப்பு, குருதி உறைதல் போன்றனவற்றை மாற்றலாம் என்று நம்பப்படுகின்றது. எனினும் தகுந்த ஆதாரங்கள் இல்லை.