இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடிய சித்த மருந்துகள் உள்ளதா?

இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடிய சித்த மருந்துகள் உள்ளதா?

இதய நோய்கள் வராமல் தடுக்கவும், இதய நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன. அவற்றில் மிக எளிமையான சித்த மருத்துவ முறைகளில் ஒன்று தான் குடிநீர் வகைகள். சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த குடிநீரை பயன்படுத்தி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த குடிநீர் வகைகள் வருமாறு: 

மூலிகை குடிநீர் 1: 

மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, நாவல் விதை இவற்றை சம அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி குடிநீராக்கி 60 மில்லி அளவு காலை, மாலையில் குடிக்கலாம்.

மூலிகை குடிநீர் 2: 

பேரீச்சை, சிங்காரக் கிழங்கு (பன்னிமோந்தான் கிழங்கு), நிலப்பனை, தண்ணீர் விட்டான், வில்வப் பட்டை, தாமரைக் கிழங்கு, மருதம்பட்டை இவற்றை தலா 35 கிராம் எடை அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிநீராக்கி காலையில் மட்டும் குடிக்கவும்.

மூலிகை குடிநீர் 3: 

வில்வப்பட்டை, தேவதாரம், குரோசாணி ஓமம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மருதம்பட்டை இவைகளை தலா 35 கிராம் அளவு எடுத்து 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து, எட்டில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்து 60 மில்லி வீதம் காலை, மாலை குடிக்கவும். 

மூலிகை குடிநீர் 4: 

ஆட்டின் தமரகம் (இருதயம்) ஒன்றை எடுத்து அதை சிறிய துண்டுகளாக்கி அத்துடன் இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி இவற்றின் பொடிகள் ஒரு சிட்டிகையும், உப்பு ஒரு சிட்டிகையும் சேர்த்து 200 மில்லி அளவு தண்ணீர்விட்டு நன்றாக காய்ச்சி சூப் போன்று தயாரித்து கொடுக்கலாம்.

இது தவிர, வெண்தாமரை சூரணம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும். அதுபோல தேனில் ஊறவைத்த கர்ச்சூர் வகை பேரீச்சையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு நோய் வரும் ஆபத்தை தடுக்கலாம்.