உடலின் நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவும் முத்திரை...

உடலின் நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவும் முத்திரை...

நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன. 

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.

செய்முறை :

கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது. 

இந்த முத்திரையை தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.

மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும். 

ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது. 

முத்திரையைச் செய்ய ஆரம்பித்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும். 

பலன்கள் :

உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம். 

அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.

சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத் தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும். 

வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும். 

எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்சினை சரியாகும்.

நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.

வெள்ளைப்படுதல் பிரச்சினை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும். வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்சினை குறையும். மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும்.