அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய்!!

அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய்!!

வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது.இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்ட மின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும்.

மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இல்லை.

இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். வைட்டமின் ஏ வை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல் படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி, சவ்வுப் பகுதிகளையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை – நிரம்பாத கொழுப்பு அமிலமும் உள்ளன.

இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது. பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது.

பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது. பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப் படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.