உடலுக்கும், மூளைக்கும் தியானத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

உடலுக்கும், மூளைக்கும் தியானத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் 

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் என்பதுதான் தியானம் மூலமாக கிடைக்கும் பலன்களில் மிக முக்கியமான பலன் ஆகும்.

உலகில் நிலவும் இரைச்சல்களுக்கு இடையே உங்களுக்கு மிகுந்த மன அமைதியை கொடுக்கக் கூடியது தியானம் ஆகும். உங்களுக்கு மிகுந்த கோபம், மன அழுத்தம் அல்லது கவலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் அவசியம் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதன் மூலமாக ஆழ்மன அமைதியை நீங்கள் உணர முடியும்.

நமது இதயத்தையும், ஆன்மாவையும் இணைக்கும் ஒரு கருவியாக தியானம் இருக்கிறது. பழங்காலத்தில் இருந்தே இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தியானம் மூலமாக உங்கள் உடலுக்கும், மூளைக்கும் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றை இந்தச் செய்தியின் மூலமாக பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கும் : 

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் என்பதுதான் தியானம் மூலமாக கிடைக்கும் பலன்களில் மிக முக்கியமான பலன் ஆகும். தியானம் செய்யும்போது, நமக்கு மன அழுத்தம் ஏற்படச் செய்யும் ஹார்மோன்களின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கவனத்தை அதிகரிக்கும் : 

நாம் சிறப்பாக கவனம் செலுத்த தியானம் உதவிகரமாக இருக்கும். இதனால், எந்தவொரு காரியத்திலும் நீங்கள் தடுமாற்றம் இல்லாமல் உறுதியான நடவடிக்கைகளை பின்பற்றலாம்.

மூச்சுப்பயிற்சி கிடைக்கும் : 

நீங்கள் தியானம் செய்யும்போது மெதுவாக மூச்சு இழுத்து, அதிகமான ஆக்ஸிஜனை உள்வாங்க முடியும். இதனால், உங்கள் நுரையீரல் விரிவடைந்து நன்றாக செயல்பட தொடங்கும்.

அடிக்‌ஷனை விரட்டலாம் : 

மது அல்லது பிற போதை பழக்கத்திற்கு எதிராக மருந்து எடுத்துக் கொள்ளும் நபர்கள் தியானம் செய்யலாம். எந்தவொரு பழக்கத்திற்கும் நீங்கள் அடிமையாக இருந்தால் அதற்கு எதிரான சிந்தனையை தியானம் கொடுக்கும். நீங்கள் எதன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளீர்களோ, அதில் இருந்து உங்களை விலக்கி நல்ல விஷயங்கள் மீது கவனம் செலுத்தச் செய்யும்.

நன்றாக தூக்கம் வரும் : 

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அது மன அழுத்தம், டென்ஷன், பணிச்சுமை அல்லது சில மருத்துவ காரணங்களாக இருக்கக் கூடும். ஆனால், நீங்கள் தியானம் செய்தீர்கள் என்றால், இரவில் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தியானத்தால் டென்ஷன் குறைந்து, உடல் இலகுவாக மாறுவதால் தூக்கம் மேம்படும்.

இரத்த அழுத்தம் குறையும் : 

இன்றைய சூழலில், பலருக்கு உயர் ரத்த அழுத்தம் என்பது பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. இதய செயல்பாட்டுடன் தொடர்புடைய நரம்பு மண்டலம் ரிலாக்ஸ் ஆக தியானம் உதவும். இதன் விளைவாக உங்களுக்கு ரத்த அழுத்தம் குறையும். மிகுந்த இக்கட்டான பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ளும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க தியானம் உதவும்.