அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவகுணம் கொண்ட ஆலமரம்...!!

அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவகுணம் கொண்ட ஆலமரம்...!!

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும். உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெய்யில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும். ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.

வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும். ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்.

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.