மண்ணீரல் நோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில முக்கிய அறிகுறிகள்!

மண்ணீரல் நோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில முக்கிய அறிகுறிகள்!
 
நம் உடலில் இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல், கணையம், சிறுநீரகங்களைப் போன்றது தான் மண்ணீரல். பலருக்கும் உடலில் இருக்கும் மண்ணீரல் பற்றி தெரியாது. அது எங்கு உள்ளது, என்ன பணியை செய்கிறது என்பன போன்ற ஒரு விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மண்ணீரலும் உடலில் ஓர் முக்கியமான பணியைச் செய்கிறது என்பது தெரியுமா? இது ஒருவரது கையளவு தான் இருக்கும். இது வயிற்றின் இடது பக்கத்தில் இரைப்பைக்கு சற்று மேலே அமைந்துள்ளது.

மண்ணீரல் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஒரு வகையான இரத்த வெள்ளையணுக்கள் உருவாக்கும். மேலும் மண்ணீரலும் இரத்தத்தை வடிகட்டுவது, உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்ப்பது, பழைய அல்லது சிதைந்த இரத்த சிவப்பணுக்களை நீக்குதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் என பல முக்கிய செயல்களை செய்கிறது. மண்ணீரல் விலா எலும்புகளின் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்றாலும் இதில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெரும்பாலும் மண்ணீரல் வீக்கம் தான் ஏற்படும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. ஆனால் மண்ணீரலில் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்பட்டால், அது மண்ணீரல் வீக்கத்தை தவிர வேறு எவ்வித பெரிய அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இருப்பினும் ஒருவரது மண்ணீரலில் நோய்கள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், அது ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும். இந்த அறிகுறிகள் சாதாரணமாகத் தான் தோன்றும்.

உங்களுக்கு மண்ணீரல் நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உங்கள் மண்ணீரலில் பிரச்சினை உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அடிவயிற்று வலி :

ஒருவருக்கு அடிவயிற்று வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மண்ணீரல் நோய்கள் அவ்வளவு பெரிய அறிகுறிகளை வெளிக்காட்டாது. ஆரம்பத்தில் வயிற்றில் லேசாக வலியுடன் தான் ஆரம்பமாகும். இந்த வலியானது இடது வயிற்றிற்கு மேல் பகுதி வரை பரவி இருக்கும். அதோடு, இடது தோள்பட்டையிலும் வலியை சந்திக்கக்கூடும். சில சமயங்களில் வலியானது மேல் உடல் முழுவதுமாக இருக்கும். இப்படி ஏற்படும் வலி போகாமல் அப்படியே ஒரு வாரத்திற்கு நீடித்திருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு :

பொதுவாக ஒருவர் வயிறு நிறைய உணவு உண்டால் தான், வயிறு முற்றிலும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு மற்றும் வயிற்று உப்புசத்தை உணர்வார்கள். ஆனால் ஒருவருக்கு வெறும் வயிற்றிலேயே இம்மாதிரியான உணர்வு ஏற்பட்டால், மண்ணீரலில் ஏதோ தீவிர பிரச்சினை உள்ளது என்று அர்த்தம். மண்ணீரல் வீங்கி இருந்தால், அது இரைப்பையை அழுத்தியவாறு இருக்கும். இந்நிலையில் மிகவும் குறைவான அளவிலேயே வயிறு நிரம்பிய உணர்வு எழுவதோடு, வெறும் வயிற்றிலும் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். சில சமயங்களில் வலியையும் சந்திக்க நேரிடும். ஆகவே பல நாட்கள் இம்மாதிரியான உணர்வு இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இரத்த சோகை :

உடலில் மண்ணீரல் மிகப்பெரிய வேலையான இரத்த செல்களில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை வடிகட்டும் பணியை செய்கிறது. மேலும் இது இரத்த வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது. ஒருவரது மண்ணீரல் வீங்கி இருந்தால், மண்ணீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, உடலில் உள்ள இரத்தம் வலிமையுடன் இல்லாமல், இரத்த சோகையை உண்டாக்கும். இரும்புச்சத்துக் குறைபாடு மட்டும் ஒருவருக்கு இரத்த சோகை உண்டாக்குவதில்லை, மண்ணீரலின் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தாலும் இரத்த சோகை ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

நாள்பட்ட களைப்பு :

மண்ணீரல் உடலின் வடிகால் என்றும் அழைக்கப்படும். ஏனெனில் இது இரத்த வெள்ளையணுக்களை உருவாக்குவதோடு, உடலில் இருந்து இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களையும் நீக்குகிறது. முக்கியமாக இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் வடிகட்டி நீக்கும். எப்போது ஒருவரது மண்ணீரலின் செயல்பாட்டில் இடையூறு அல்லது மண்ணீரல் வீக்கமடைகிறதோ, அப்போது போதுமான இரத்த வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போய், உடலின் ஆற்றலும் மோசமாகும். உடலில் ஆற்றல் இல்லாவிட்டால், உடல் பலவீனமாகி, அன்றாட செயலைக் கூட செய்ய முடியாமல் போகும். எனவே உங்களுக்கு பல நாட்களாக களைப்பு இருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று மண்ணீரல் ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

அடிக்கடி தொற்றுகள் :

அடிக்கடி உடல்நலக் குறைவு மற்றும் தொற்றுகள் ஏற்பட்டால், அதற்கு மண்ணீரல் நோய்களும் சில சமயங்களில் காரணமாகும். ஆம், இரத்த வெள்ளையணுக்களை உருவாக்கும் பணியைச் செய்யும் மண்ணீரலின் செயல்பாடு மோசமாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் பாதிக்கப்பட்டு, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் தொற்றுக்களானது காதுகள், சைனஸ் மற்றும் சுவாசப் பாதையில் ஏற்பட்டால், அவை மண்ணீரல் நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அதிகமான உதிரப்போக்கு :

மண்ணீரல் வீக்கம் அல்லது முறிவு இருந்தால், அது இரத்த தட்டுக்களின் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தி, இரத்தம் உறைவதைத் தடுக்கும். இந்நிலையில் ஒருவருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அது அசாதாரண உதிரப்போக்கை ஏற்படுத்தும். பொதுவாக இரத்தம் உறைவதற்கு 12-24 மணிநேரம் ஆகும். அதிலும் இந்த உதிரப்போக்கு ஒரு நாளைக்கு மேலாக இருந்தால், உங்கள் மண்ணீரலில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இத்தகையவர்களுக்கு மண்ணீரல் முறிவு அல்லது மண்ணீல் வீக்கம் இருக்க வாய்ப்புள்ளது.

இப்போது மண்ணீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகளைக் காண்போம். ஒருவர் இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், மண்ணீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மண்ணீரலின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

மண்ணீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகள்!

தண்ணீர் :

மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் உறுதுணையாக இருக்கும். அதற்கு தினமும் 8-10 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். மண்ணீரலின் சிறப்பான செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், மண்ணீரலால் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற முயைமல் போகும், செரிமானம் தாமதமாகும், உடல் வறட்சியடையும். எனவே மண்ணீரல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அவசியம் என்பதை உணர்ந்து, தினமும் நீரை அதிகம் குடிப்பதோடு, மூலிகை டீ, பால், காய் மற்றும் பழங்களுள் பீச், ஆரஞ்சு, தக்காளி, தர்பூசணி, வெள்ளரிக்காய், செலரி,லெட்யூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளுங்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் :

காய்கறிகளையும், பழங்களையும் ஒருவர் அதிகம் சாப்பிட்டு வந்தால், மண்ணீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதிலும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள் நிறைந்த ஆப்பிள், செர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, கேரட், செலரி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், லெட்யூஸ் இலை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் மண்ணீரல் செயல்பாடு மேம்படுவ்தோடு, செரிமானம் சிறப்பாகவும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த உணவுப் பொருட்களை சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும்.

இஞ்சி :

அன்றாட உணவில் இஞ்சி சேர்த்து வருவதன் மூலம், மண்ணீரலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். இஞ்சியில் உள்ள நொதிப்பொருளான ஜின்கிபெயின், புரோட்டீன்களை செரிப்பதற்கு உதவுவதோடு, உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்டுத்தி, உடலை சுத்தம் செய்யும் மண்ணீரலின் செயல்முறையை சிறப்பாக்கும்.

கொழுப்புமிக்க மீன் :

வாரத்திற்கு 3 முறை மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால், அது மண்ணீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதிலும் சால்மல், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியமான அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்ற உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் மண்ணீரை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள் அதிகம் உள்ளது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் மட்டுமின்றி, ஆளி விதை, கனோலா எண்ணெய், சோயா பீன் எண்ணெய், பூசணிக்காய் விதை, வால்நட்ஸ் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.