வேப்பம் பூவை உட்கொள்வதால் என்ன பயன்களை பெறலாம்...?

வேப்பம் பூவை உட்கொள்வதால் என்ன பயன்களை பெறலாம்...?

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து பருப்புப் பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும்.

வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். 

நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், பல்பம், சாக்குகட்டிகள் சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.

வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும். வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது.

பசும்பால் 200 கி. தேங்காய்ப்பால் 200 கி. வேப்பம்பூ அரைத்த விழுது 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து அவற்றை அடுப்பில் வைத்து லேகியமாக கிளறி தினமும் சிறிதளவு சாப்பிட நல்ல பலன் தெரியும்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது.