கருப்பு மஞ்சள் மருத்துவ குணங்கள்...

 கருப்பு மஞ்சள் மருத்துவ குணங்கள்...

 

சித்த_மருத்துவத்தில் கருப்பாக உள்ள மூலிகைகளை, உயர்வாகப் போற்றுகிறார்கள், கருந்துளசி, கருநெல்லி, கருநொச்சி போன்ற மூலிகைகள், காயகற்ப மூலிகைகளைப்போல, அளவற்ற நன்மைகள் தருமென்கிறார்கள்.

அதுபோல, ஒரு அரிய மூலிகைதான், குர்குமா எருஜினோசா எனும் கருமஞ்சள். அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில் அரிதாகக் காணப்படும் கருமஞ்சள் செடி, இரண்டு மீட்டர்வரை வளரும், இந்தச்செடியின் வேர்க்கிழங்குகள் மருத்துவ குணமிக்கவை.

 

கருமஞ்சள்

இலைகளின் அடுக்குகளில் வசீகரமாகக் காணப்படும் சிவந்த மலர்களால், இச்செடிகள், சில இடங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. கேரளத்தில் அதிகம் விளையும் இச்செடி, வட இந்தியாவில், ஆன்மீகரீதியாக, உடல் பாதிப்புகள், வேலையின்மை மற்றும் தொழில் பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருவதாகப் போற்றப்படுகிறது. கருமஞ்சள் வேர்க்கிழங்குகளை சுவைக்க கசப்பாக இருந்தாலும், அவற்றினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

 

ஊட்டச்சத்துக்கள்

கருமஞ்சளில், வேதி எண்ணை, மாவுச்சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ஆல்கலாயிடுகள், குர்குமின், மற்றும் டானின் நிறமிகள் நிறைந்துள்ளன.

 

பசியின்மை

கருமஞ்சள் கிழங்கு, பசியின்மையைப் போக்கி, பசியைத் தூண்டுகிறது. சிறு குழந்தைகள் பசியின்மையால் சாப்பிட மறுக்கும்போது, அதை சரிசெய்து, பசியைத் தூண்டுகிறது. கருமஞ்சள் கிழங்கை, நீரில் கொதிக்கவைத்து, அதைக் குடித்துவர, பசியின்மை நீங்கி, பசி அதிகரிக்கும்.

 

சரும பாதிப்பு

பசியைத்தூண்டி உடல்நலத்தை காப்பது மட்டுமன்றி, சொறி சிரங்கு, புண்கள், படர்தாமரை போன்ற சரும கிருமிகளால் ஏற்படும் தோல்வியாதிகளையும் சரி செய்கிறது.

 

சொறி சிரங்கு

கருமஞ்சள் கிழங்கை, நன்கு அரைத்து அதில் தேங்காயெண்ணையை சேர்த்து நன்றாக கலக்கி பசைபோல ஆக்கியபின், சொறி, சிரங்கு, புண்கள் மற்றும் படர்தாமரை போன்றவற்றின் மேல் தடவிவர, அவை சீக்கிரம் ஆறிவிடும். தோலும் விரைவில் இயல்பாகிவிடும். கருமஞ்சள் கிழங்கை சிறிது எடுத்து, நீரில் கொதிக்கவைத்து, ஆறியபின் அந்த நீரைப்பருகி வந்தாலும், தேமல்,படை சிரங்குபோன்ற நச்சு பாதிப்புகள் நீங்கிவிடும்.

 

கரு வளர்ச்சி

கருமஞ்சள் வேரை குடிநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால், பெண்களின் வயிற்றில் உருவான கரு பாதிப்பில்லாமல் வளரும் சூழ்நிலை உருவாகிறது.

மாதாந்திர விலக்கின் வலியைப் போக்குகிறது.

 

மாதவிலக்கு

மாதவிலக்கில், பெண்களுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படும்போது, கருமஞ்சள் வேர்க்கிழங்கு, கென்குர் எனும் வாசனை இஞ்சி, மஞ்சள் மற்றும் புளி இவற்றை மூன்று டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி, ஒருடம்ளர் அளவில் சுண்டிவரும்போது, ஆறவைத்து, குடித்தால், மாதவிலக்கு வலிகள் பறந்துவிடும்.

 

பிரசவத்துக்குப் பின்

குழந்தைப் பிறப்புக்கு பின் உடல் இரத்தத்தை தூய்மை செய்கிறது.

குழந்தைபெற்ற தாய்மார்களுக்கு, இரத்தத்தில் அழுக்கு மற்றும் கசடுகள் கலந்திருக்கும். இவற்றை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்யும் மூலிகையாக, கருமஞ்சள் விளங்குகிறது. கருமஞ்சள் கிழங்கை சிறிது எடுத்து சுத்தம் செய்தபின், மூன்று டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி, மூன்றிலொரு பங்காக தண்ணீர் சுண்டியபின், இளஞ்சூட்டில் குடித்துவர, பிரசவித்த தாய்மார்களின் இரத்த அசுத்தம் நீங்கி, இரத்தம் சுத்தமாகிவிடும்.

 

இருமல்

காலநிலை மாற்றங்களால், இருமல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். இருமலை சாதாரணமாக விட்டுவிட்டால், அதுவே கடுமையான சுவாச பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இருமலைப் போக்க, கருமஞ்சள் கிழங்கை சுத்தம் செய்து சாப்பிட்டுவரலாம். கருமஞ்சள், சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கென்குர் வாசனை இஞ்சி இவற்றை நீரிலிட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் சுண்டிவந்ததும், குடித்துவர, இருமல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் விரைவில் குணமாகிவிடும்.

 

உடல் நச்சுக்கள்

கருமஞ்சள் இயற்கை நச்சுநீக்கியாக செயல்பட்டு, உடலில் சேர்ந்துள்ள நஞ்சுகளை வெளியேற்றும். சாப்பிடும் உணவு மற்றும் நொறுக்குதீனிகளால் உடலில் பலவிதமான நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் சேர்ந்திருக்கும். அவை மொத்தமாக உடலைவிட்டு வெளியேறாமல், உடம்புக்கு தொல்லைகள் தந்துகொண்டிருக்கும்.

கருமஞ்சள் கிழங்கு மற்றும் சுண்டைக்காய் இவற்றை மூன்று டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி, ஒரு டம்ளராக சுருங்கியதும், அந்த மூலிகைநீரை, தினமும் சில நாட்கள் குடித்துவந்தால், உடல் நச்சுக்கள் மொத்தமாக வெளியேறி, உடல் புத்துணர்வும், புது அழகும் பெறும்.

 

குடல் புழுக்கள்

சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி, சாப்பாட்டில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு விளையாட்டு மட்டும் காரணமல்ல, அவர்கள் சுத்தமில்லாத குப்பை கூளங்கள் நிறைந்த இடங்களில் விளையாடிவிட்டு, வீடுகளுக்கு வந்தபின் கைகால்களைக் கழுவாமல், தின்பண்டங்களை கொறிப்பதாலோ, காபி போன்ற பானங்களைப் பருகுவதாலோ, நச்சு கிருமிகள் உடலில் பரவி, அதனால் குடலில் புழுக்கள் ஏற்படுகின்றன. குடல் புழுக்கள் அவர்களின் பசியைத்தடுத்து, பசியின்மையை ஏற்படுத்தி, உடலில் சத்துக்கள் இல்லாததால், உடல் வளர்ச்சி பாதித்து, எடையும் குறைந்துவிடும். கருமஞ்சள் கிழங்கை நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி, அந்த நீரை தினமும், குடித்துவர, சிறுவர்களின் வயிற்றுப்புழுக்கள் அழிந்து, நன்கு பசியெடுத்து, உடல் எடையும் வளர்ச்சியும் சீராக அதிகரித்து வரும்.

 

சிவப்பணுக்கள் உற்பத்தி

இரத்த ஆற்றலை, இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

சிலருக்கு உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி தேவையான அளவு இல்லாதபோது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழந்து, உடல் வளர்ச்சி பாதித்து, கண்களில் ஒளியிழந்து, நடக்க்கும்போது சோர்வின் காரணமாக, உடலில் தளர்வு ஏற்படுகிறது. #அனிமியா எனும் இரத்த சோகை நோய் பெண்களையே, அதிகம் பாதிக்கிறது. இரத்த சோகையை முழுமையாக குணப்படுத்தாவிட்டால், அதுவே, பல மோசமான நோய்கள் உடலில் ஏற்படக் காரணமாகிவிடும்.

கருமஞ்சள் கிழங்கு மற்றும் சில பப்பாளி இலைகளை எடுத்துக்கொண்டு, நன்கு சுத்தம் செய்தபின், அவற்றை நன்கு அரைத்து, விழுதாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த விழுதை இட்டு, நன்கு கலக்கி, அந்த குடிநீரை தினமும் தொடர்ந்து குடித்து வர வேண்டும். இதன்மூலம், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் விலகி, இரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, உடலில் இரத்த சோகையின் பாதிப்பு மறைந்து, புது இரத்தம் உற்பத்தியாகி, உடலில் வலிமையும், மனதில் உற்சாகமும் பொங்கும்.

 

மூலநோய்

உடல் வேதனை தரும் மூல நோயைத் தீர்க்கிறது. கருமஞ்சளில் இயல்பாக உள்ள வேதித்தாதுக்கள், மூல நோயை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படுகின்றன. கடுமையான மூலநோயையும், கருமஞ்சள் குணப்படுத்திவிடும்.

 

கருமஞ்சள் கிழங்கை சிறு துண்டுகளாக ஆக்கி, துருவிவைத்து, நன்கு அலசியபின், பிழிந்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, நன்கு கலக்கிக்கொள்ளவும். காலையில் எழும்போது, தினமும் இந்த கலவையைக் குடித்துவர, மூல நோய் விரைவில் குணமாகிவிடும்.

 

எச்சரிக்கை

அதிகமாக உபயோகித்தால், உடலை பாதித்துவிடும்!. உடலில் பசியைத் தூண்டுகிறது, இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புகளைப் போக்குகிறது, இரத்த சோகையை போக்கி, பெண்களின் மாதவிலக்கு வலியை தடுக்கிறது, உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது, மூலநோயைக் குணப்படுத்துகிறது. இதுபோன்ற ஏராளமான நன்மைகள், கருமஞ்சளை உபயோகிப்பதால் கிடைத்தாலும், கருமஞ்சளை, நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்திவரக் கூடாது.

கருமஞ்சள் கிழங்கை நெடுநாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உணவுக்கு செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு ஆற்றல் தரும் புரதங்கள், பித்த நீர் மற்றும் பல்வேறு சுரப்பிகளை சுரந்து, உடல் இயக்கத்தின் முக்கிய ஆற்றல் மையமாகத் திகழும் கல்லீரலை பாதித்து, அதன் செயல்களில் தடையேற்படுத்தி, உடல் நலம் கெடக் காரணமாகி விடுகிறது, என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.