நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமா? தேரையர் சித்தர் கூறும் ரகசியம்.

நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமா? தேரையர் சித்தர் கூறும் ரகசியம்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1502

திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல் 
பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல் 
உண்ணுங்கால் நீர் கருக்கி மோர் பெருக்கி 
நெய்யுறுக்கி உண்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி

பொருள்:

மலசலம் ஒழுங்காக போக்கி, விந்துவை அதிகம் விடாமல் தேக்கி, நீரைக் காய்ச்சி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்டால் அவர்களை எந்த நோயும் அணுகாது 

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1503

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்
மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே.

பொருள்:

பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்;

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1504

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்
மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. 

பொருள்:

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம். கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1505

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்
வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே

பொருள்:

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம், ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய நோய் வராமல் தடுப்போம், வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம், மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம், நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1506

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை
வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே

பொருள்: 

பெருக்கும் துடைப்பத்தால் எழும் புழுதி உடல் மேல் படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம். இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், ஆளுக்கு துணி இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம். பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எந்த நோயும் நம்மை அணுகாது, எனவே நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு எந்த அவசியம் இருக்காது என்கிறார் தேரையர் சித்தர்!