சேற்றுப் புண்ணுக்கு மருதாணி பூச்சு!

சேற்றுப் புண்ணுக்கு மருதாணி பூச்சு!...

சொறி, சிரங்கு, அரிப்புனு சில பேர் படாத பாடுபடுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு சில வைத்தியங்களைச் சொல்றேன் கேட்டுக்கோங்க.
இதைப் படிச்சு முடிச்சதும், 'அட, ஏற்கெனவே இதே நோய்களுக்கு வேற வேற வைத்தியம் சொல்லியிருந்தாங்களே'னு நினைக்கத் தோணும். அது ஒரு வகை வைத்தியம்... இது ஒரு வகை வைத்தியம். அவ்வளவுதான்.

பூவரசு மரம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த மரத்துல புல்லுருவினு ஒரு கொடி வளரும். அந்தக் கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்துக்கிடுங்க. அதோட சின்னதா ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து மையா அரைச்சிக்கோங்க. எந்தெந்த இடத்துல ஊறல், சொறி, சிரங்கு இருக்கோ அங்கெல்லாம் அதைப் பூசணும். மூணு மணி நேரம் கழிச்சு குளிச்சிரலாம்.
பூவரசம் பூ, இல்லைனா... பூவரசம் காய் எடுத்துக்கோங்க (ரெண்டையும் சேர்த்தும் அரைக்கலாம்). அதோட மஞ்சள் துண்டு சேர்த்து அரைச்சு, சிரங்கு உள்ள இடமெல்லாம் பூசிரணும். மூணு மணி நேரம் கழிச்சு, பாசிப்பயறு மாவு தேய்ச்சுக் குளிக்கணும்.
மேலே சொன்ன ரெண்டு வைத்தியத்தையும், ஒரு மண்டலத்துக்குக் கடைபிடிச்சா... நல்ல குணம் கிடைக்கும்.

கொன்றை மலர் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுல மைக்கொன்றைனு ஒரு வகை இருக்கு. அதோட இலையை கோலிக்குண்டு அளவு எடுத்து அரைச்சு பால்ல கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா... எந்த மாதிரி தோல் நோயும் விட்டேனா பாருன்னு ஓடிப் போயிரும் போங்க.

மழைக் காலம் வரப்போவுது. அப்ப தண்ணியில அங்க இங்கனு அலையுறதுனால கால் இடுக்குல சேத்துப்புண் வந்து பாடா படுத்தும். இதுக்கு கைகண்ட மருந்து இருக்கு. மருதாணி இலைய பறிச்சு கொஞ்சம் தண்ணி விட்டு மையா அரைச்சு சேத்துப்புண் உள்ள எடத்துல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் பூசணும். சில மணி நேரம் கழிச்சு கழுவிரணும்.
இதேமாதிரி பீர்க்கன் கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்து கசக்கி, ஒரு ஸ்பூன் சாறு எடுத்து, புளியங்கொட்டை அளவு கல் சுண்ணாம்புச் சேர்த்து சேத்துப்புண் உள்ள எடத்துல பூசணும்.
மேல சொன்ன ரெண்டு வைத்தியத்தையும் ரெண்டு மூணு நாள் செஞ்சாலே குணம் கிடைக்கும்.