வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் பெருநெல்லி இலை...

வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் பெருநெல்லி இலை !

இன்றைக்கு மழை வெள்ளம் சூழ்ந்த கால கட்டத்தில் தோன்றக் கூடிய பல்வேறு நோய்களுக்கு மருந்துகளை தயாரித்து பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக சீதபேதி, இரத்த பேதி போன்ற வயிற்று போக்கு, வயிற்று கோளாறுகளை சரி செய்வதற்கான மருந்துகளை தயார் செய்யலாம். பெரும்பாலும் மழைக் காலங்களில் தோன்றக் கூடிய இது போன்ற நோய்களை தடுப்பதற்கு எளிய முறையில் நாம் மருந்தை தயார் செய்ய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் இடங்களில் ஏராளமாக விளைந்திருக்கும் கீழாநெல்லி செடியானது வயிற்று போக்கு, வயிற்று கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

அதே போல் நெல்லி மரத்தின் இலைகளும் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகிறது. அதே போல் மாதுளம் பழத்தின் முத்துக்கள் மற்றும் தோல் வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யக் கூடியதாகவும் உள்ளது. மாதுளம் பழம் வயிற்று போக்கை கட்டுப்படுத்தக் கூடியது. வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கக் கூடியதாக உள்ளது. அதே போல் மாங்கொட்டையில் காணப்படும் பருப்பு வயிற்று கோளாறுகளுக்கு மிகச் சிறந்த மருந்தாக அமைகிறது.

மாங்கொட்டையை பயன்படுத்தி வயிற்றுப் போக்கை சரி செய்யக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். மாங்கொட்டையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை காலை மாலை இரு வேளையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு ஆகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது இதில் பாதி அளவு கொடுத்தால் போதும். இந்த மாங்கொட்டை பருப்பை சுட்டும் சாப்பிடலாம். இதில் காணப்படும் துவர்ப்பு வயிற்று கோளாறுகளை சரி செய்யக் கூடியதாகும். கழிசல், வயிற்று போக்கு, பேதி போன்றவற்றை கட்டுப்படுத்தும். அதே போல் நெல்லி மரத்தின் இலைகளை பயன்படுத்தி வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். பெரிய நெல்லியின் இலைகள். இதன் காம்பை நீக்கிவிட்டு பசையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இதனுடன் நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.50 மிலி முதல் 100 மிலி வரை தினமும் 4 வேளை பருக வேண்டும். இந்த கஷாயத்தை பருகி வருவதன் மூலம் பேதிகட்டுப்படுகிறது. மழை காலத்தில் நீர், உணவு கோளாறு மூலம் ஏற்படும் வயிற்று போக்கு, பேதி ஆகியவை ஏற்படுவதை இது கட்டுப்படுத்துகிறது. நெல்லி இலை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.

வயிற்று வலியுடன் கூடிய பேதியை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. அதே போல் மாதுளம் தோலை பயன்படுத்தி நாம் பேதியை கட்டுப்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் மாதுளம் பழத் தோல். ஒரு வேளை கஷாயத்திற்கு பாதி பழத்தின் தோல் வரை பயன்படுத்தலாம். அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் ஒரு டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக தயார் செய்து கொள்ள வேண்டும்.

இதுவும் வயிற்று போக்கு, பேதியை நிறுத்தக் கூடியது மாதுளம் பழத் தோல். பொதுவாக பெரும்பாலும் துவர்ப்பு சுவையுடைய உணவு பொருட்கள் வயிற்று போக்கை கட்டுப்படுத்தக் கூடியது. மாதுளம் பழச்சாறை பருகும் போது வயிற்று போக்கு காலத்தில் உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பையும் சரி செய்ய முடியும். இவ்வாறு நமக்கு அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு மழைக்கால பேதிக்கு நாம் மருந்துகளை தயார் செய்ய முடியும்.