குதிகால் பித்த வெடிப்பு மறைய வேண்டுமா?

குதிகால் வெடிப்பு மறைய வேண்டுமா...

குதிகால் பித்த வெடிப்பு எல்லாப் பெண்களுக்கும் சாதாரணமாக தோன்றுவதுதான்.

குறிப்பாக, பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால் ஈரப்பசை விரைவில் நீங்கி வெடிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தாலும், தவறான பொருந்தாத காலணிகள் அணிந்தாலும் குதிகால் வெடிப்பு வரும்.

இயற்கையான முறையில் குதிகால் வெடிப்பை எப்படி நீக்குவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

செக்கில் ஆட்டப்பட்டு நீங்களே நேரடியாக வாங்கிய தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் தடவி வந்தால், உங்களின் பாதங்களில் உள்ள குதிகால் பித்த வெடிப்பு நீங்கி மென்மையாக இருக்கும்.

வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் அகலும்.

இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை லேசாக சூடு செய்து குதிகால்களில் தடவி மசாஜ் செய்து, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வர மூன்றே நாட்களில் மாற்றத்தை காணலாம்.

தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி வந்தால், பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.

எலுமிச்சம்பழம் சாறு கலந்த வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருக்கேற்ற உதவும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும். இதன் பிறகு சாதாரண வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்புடன் விளக்கெண்ணெயை நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு விட வேண்டும். ஒரு வாரத்தில் பித்த வெடிப்பு முழுமையாக மறைந்து விடும்.

தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியான பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் பாதங்கள் மென்மையாக வெடிப்பின்றி இருக்கும்.