மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!

அரிய பலன்கள் தரும் மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்! 

மரவள்ளிக்கிழங்கு, நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் நிறைந்த கிழங்கு வகையாகும். நிலக்கடலை போல சிறு செடிகளாக வளரும் இவற்றின் வேர்களில், கிழங்குகள் உண்டாகின்றன 

மரவள்ளிக்கிழங்குகள் உலக அளவில் அதிகம் விளையும் ஆப்பிரிக்க நாடுகளில், மரவள்ளிக்கிழங்கே, முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது, ஏழை மக்களுக்கு பஞ்ச காலங்களிலும் போர்க் காலங்களிலும் உணவாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்-C சத்து மிகுந்துள்ளது.

பல்வேறு பொருட்களின் தயாரிப்புகளுக்கு மூலப் பொருளாகவும், மருந்துப் பொருட்கள் தயாரிக்க, உணவில் சேர்க்க பல வடிவங்களில், மரவள்ளிக்கிழங்கு பயனாகிறது.

கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் மரவள்ளிக்கிழங்கும் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் காரணம் என்றால், அது மிகையில்லை.

மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம், அல்லது கூட்டு, பொரியலாக செய்யலாம். அதன் அற்புதத்தை இப்போது பார்க்கலாம்.

உணவுத்துறையில் மரவள்ளிக்கிழங்கு:
அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.

கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது.

தற்காலத்தில் நாற்பது வயதை அடையும் முன்னரே, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புகளின் வலிமை குறைந்துவிடுகிறது, இதனால் கை கால் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படுகிறது. பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.

ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும், உடலில் நீரின் அளவை, சரியாக்கும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.

இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

வயிற்றுப்புண் தீர: 

மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாராகும் ஜவ்வரிசியை நீர் விட்டு கொதிக்க வைத்து, கஞ்சி போல சில வேளைகள் பருகிவர, அவை குணமாகும்.

ஜவ்வரிசி நீரை மோரில் உப்பு கலந்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டான வயிற்று வலி குணமாகும், உடலுக்கு ஆற்றல் உண்டாகும்.

மரவள்ளிக்கிழங்கு மாவில் கஞ்சி செய்து, பால், பனை வெல்லம் கலந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிட, உடலுக்கு வளமாகும்.

மரவள்ளிக்கிழங்கை குச்சிகள் போல சீவி, அல்லது வட்ட வடிவில் சீவி, எண்ணையில் இட்டு பொறித்து, அவற்றை "மரவள்ளி சிப்ஸ்" என்ற பெயரில் சுவையான நொறுக்குத் தீனியாக தயாரிக்கின்றனர்.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட பின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்

ஜவ்வரிசி :

ஜவ்வரிசி இந்தியாவில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தே, உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் தற்காலத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை அதிகமாதலால், ஜவ்வரிசி தயாரிக்க ஆலைகளில், உடலுக்கு தீங்கு தரும் மக்காச்சோளத்தை பயன்படுத்துகின்றனர். ஜவ்வரிசி வாங்கும்போது, இவற்றைக் கவனித்து வாங்க வேண்டும்.

ஜவ்வரிசி கஞ்சி, சிறந்த காலை சிற்றுண்டியாகும், மேலும் விருந்துகளில் உணவில் சேர்க்கப்படும் ஜவ்வரிசி பாயசம், சுவையும் சத்தும் மிகுந்த செரிமான உணவாகும்.

ஜவ்வரிசியில் இருந்து வடகம், வற்றல் போன்ற எண்ணையில் பொறிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் ஜவ்வரிசி லட்டு போன்ற இனிப்பு வகை பதார்த்தங்களும் செய்யப்படுகின்றன 

 மாவு :

அரிசி மாவிற்கு மாற்றாக பயனாகும் மரவள்ளிக்கிழங்கு மாவு, பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து, வேஃபர்கள் எனும் மொறுமொறுப்பான தீனி வகைகள், வடகங்கள் மற்றும் அப்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன.

 மருத்துவத் தயாரிப்புகள்

மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும், திரவ நிலை குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை மருத்துவத் துறைகளிலும், உணவுவகை தயாரிப்பிலும் பயனாகின்றன.

 பயனாகும் பிற துறைகள்

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனும் மாவுப்பொருள் பருத்தி ஆடைகளின் மொடமொடப்பு தன்மைக்கும், காதிதம் மற்றும் காகித அட்டைப் பெட்டிகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. மற்றும் எத்தில் ஆல்கஹால் தயாரிக்கப் பயனாகின்றன.

வால் போஸ்டர்கள், ஃபிளக்ஸ் போன்றவை ஒட்ட உறுதிமிக்க பசையாகப் பயனாகிறது. புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை ஒட்டும் சாதாரண வகை பசையாகவும், பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியருக்குப் பயனாகிறது.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, துணிகளை சலவை செய்யக் கொடுத்தால், பருத்தி ஆடைகளை துவைத்து, கஞ்சியில் போட்டு சலவை செய்து கொடுப்பர்.

உடுத்தவே, புதுத்துணி போன்ற மொடமொடப்பில் இருக்கும் அவற்றுக்கு காரணம், ஸ்டார்ச் எனும் அந்த கஞ்சி, மரவள்ளிக்கிழங்கு மாவில் தயார் செய்ததாகும். இப்போது துணிகளின் சலவையில், அவற்றின் பயன்பாடு எங்காவது ஒரு மூலையில் நாம் கண்டால்கூட, அவை ஆச்சரியம்தான்.


நன்றி: Boldsky