சப்பாத்தி கள்ளி ஜூஸ்

சப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சப்பாத்தி கள்ளி என்னும் செடியை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். சப்பாத்தி போல் வட்ட வடிவத்தில் இருக்கும். இந்தச் செடியில் முட்கள் அதிகமாக காணப்படும் . இது ஒரு வகை கற்றாழை என்றும் அறியப்படுகிறது. இந்த வகை கற்றாழையின் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்று அறியப்படுகிறது.

நிறைய முட்களைக் கொண்டு, காண்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் இந்த கற்றாழை செடியில் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இப்போது இந்த சப்பாத்தி கள்ளி ஜூஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சப்பாத்தி கள்ளி ஜூஸின் ஊட்டச்சத்து விபரம் சப்பாத்தி கள்ளி ஜூஸ் குறைந்த கலோரிகளைக் கொண்டது. இந்த கள்ளிச்செடியில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் குறித்து இப்போது அறிந்து கொள்வோம். 
* வைட்டமின் சி 
* பி வைட்டமின்கள் 
* ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் 
* தாவர ஊட்டச்சத்துகள் 
* கால்சியம் 
* மெக்னீசியம் 
* பீட்டா கரோட்டின் 
* அமினோ அமிலங்கள் உணவு சார்ந்த கடைகளில் இந்த கற்றாழை சாறு தற்போது விற்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. எனவே வீட்டிலேயே சப்பாத்தி கள்ளி ஜூஸ் மிகவும் எளிய முறையில் தயாரிக்கலாம். 

சப்பாத்தி கள்ளி ஜூஸ் செய்முறை: 
1. சப்பாத்தி கள்ளியை எடுத்துக் கொள்ளவும் . அதன் முட்களை மெதுவாக விலக்கிக் கொள்ளவும். 
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு சப்பாத்தி கள்ளியை அந்த நீரில் போடவும். 
3. 4-5 நிமிடம் உயர் தீயில் கொதிக்க விடவும். 4. பின்பு நீரில் இருந்து சப்பாத்தி கள்ளியை எடுத்து ஆறவிடவும். 
5. ஆறியபின், அதன். தோல்பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கவும். 
6. அவற்றுடன் சிறிது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், தேங்காய் நீர் ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த பழங்களை சேர்ப்பதால் இந்த பானத்தின் சுவை அதிகரிக்கும் . 
7. பின்பு ஒரு வடிகட்டியில் சாற்றை வடிகட்டி, பின் பருகவும். 

இப்போது சப்பாத்தி கள்ளி ஜூஸின் நன்மைகளை காணலாம். 

எடை இழப்பிற்கு உதவுகிறது :
சப்பாத்தி கள்ளி ஜூஸ் குறைந்த கலோரியைக் கொண்டிருப்பதால் எடையை நிர்வகிக்க ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு கப் சப்பாத்தி கள்ளி சாற்றில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனைப் பருகுவதால் உங்கள் உடலுக்குப் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. தேவையற்ற நேரத்தில் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்வதும், அதிகமாக உணவு உட்கொள்ளும் உணர்வும் தடுக்கப்படுகின்றன.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது
சப்பாத்தி கள்ளி சாறு பருகுவதால் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் உடலில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால், இதய நோய் மற்றும் தமனித் தடிப்பு போன்ற அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது :
பல நூற்றாண்டுகளாக அழற்சி, வீக்கம், மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, பெருங்குடல் அழற்சி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சப்பாத்தி கள்ளி சாறு பரிந்துரைக்கப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும், பெருங்குடல் அனைத்து நச்சுகளையும் வெளியிடுவதன் மூலமும் செயல்படுகிறது.

*குறிப்பு :
இந்த சாறு பருகுவதால் சிலருக்கு குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற குடல்சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஹேங் ஓவருக்கு தீர்வு :
மது அருந்திய பின் சிலருக்கு ஹேங் ஓவர் நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து விடுபட சப்பாத்தி கள்ளி சாறு சிறப்பாக செயல்புரிவதாக சிலர் பெரிதும் நம்புகின்றனர். ஹேங் ஓவர் நிலையை வெளிப்படுத்தும் தலைவலி , குமட்டல் போன்றவற்றிற்கு இந்த சாறு சிறந்த தீர்வைத் தரும். அதிகமான மது அருந்துவதால் உண்டாகும் அழற்சிக்கு இதமளிக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த சாற்றில் இருப்பதாக அறியப்படுகிறது.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்  அளிக்கிறது 
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியைக் குறைக்கும் தன்மை சப்பாத்தி கள்ளி சாற்றில் உள்ள முக்கிய கூறுகளுக்கு உண்டு. ஆகவே மாதவிடாய். காலத்தில் அடிவயிற்றில் பெண்களுக்கு உண்டாகும் அசௌகரியத்தைப் போக்கவும், அதிகரித்த வலியைப் போக்கவும் சப்பாத்தி கள்ளி சாறு பருகலாம்.