தொண்டை வலி குணமாக பாட்டி வைத்தியம்...

தொண்டை வலி குணமாக பாட்டி வைத்தியம்...

தொடர்ந்து இருமல், சளி தொண்டை வலியால் அவதிபடுபவர்கள் இந்த தொகுப்பில் குறிப்பிட்டு உள்ளவைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தாலே போதும் தீர்வு நிச்சயம் கிடைக்கும்.

தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கும் சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும் பாட்டி வைத்தியம் குறித்த சில குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு லவங்க பட்டை , 4 ஏலக்காய், ஒரு டீ ஸ்பூன் சோம்பு, 25 கிராம் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், புதினா இலை 5 , இவை அனைத்தையும் 4 டம்ளர் நீரில் கொதிக்க விடவும். 4 டம்ளர் நீர் 2 டம்ளர் நீராக மாறும் வரை தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். பிறகு அந்த கொதித்த நீரை ஆற வைத்து காலை ஒரு கிளாஸ் இரவு ஒரு கிளாஸ் என பருகி வேண்டும். இப்படி செய்வதன் மூலம் 2 அல்லது 3 நாட்களில் தொண்டை வலி நீங்கும். தொண்டையில் ஏதேனும் புண் இருந்தாலும் சரியாகும்.

2 டம்ளர் நீரில் திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்தது) சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு கொதித்த நீரை சிறிது ஆறவிட்டு அதை தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி நீங்கும். குறிப்பு: திரிபலா சூரணம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

தொண்டை வலி குணமாக, வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதோடு சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலி நீங்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து நன்கு பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும். மேலும் இதில் சிறிதளவு வசம்பை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.

தொண்டை வலி போக, துளசி இலை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.

வெது வெதுப்பான நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும் படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்