எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் எடுப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்…

எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் எடுப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்…
 
ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பதால் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும். அதில் வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

என்ன தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாக்களை அழித்தாலும், அதிகமாக எடுக்கும் போது அது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியமே கெட்டுவிடும்.

ஏனெனில் நல்ல பாக்டீரியா செரிமானத்தை ஆரோக்கியமாக நடைபெற உதவுவதோடு, வைட்டமின் பி-யை உற்பத்தி செய்ய உதவுகிறது. ஆனால் ஆன்டிபயாடிக்குகளை அளவுக்கு அதிகம் எடுக்கும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையிழக்கச் செய்து, நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

எனவே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பதனால் ஏற்படும் பக்க விளைவுகளை எதிர்கொள்ள சில வழிகள் உள்ளது. அதைப் படித்து பின்பற்றி உடலை ஆரோக்கியமாக பராமரித்திடுங்கள்.

தண்ணீர் :

உடல் ஆரோக்கியமாகவும், எவ்வித நச்சுக்களும் சேராமல் இருக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அதிலும் ஆன்டிபயாடிக் எடுக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் தடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் :

வேண்டாம் என்ன தான் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருந்தாலும், அதனை ஜூஸ் வடிவில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனை ஜூஸாக குடிக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை உடல் நிலையை இன்னும் மோசமடையச் செய்யும்.

தயிர் :

இன்றிலிருந்து புரோபயோடிக்ஸ் நிறைந்த தயிரை தினமும் சாப்பிட்டு வாருங்கள். அதுவும் ஆன்டி-பயாடிக்ஸ் எடுப்பவராக இருந்தால், கட்டாயம் உணவில் தயிர் சேர்த்து வாருங்கள். இதனால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழியாமல் இருக்கும்.

எளிதில் செரிமானமாகும் உணவுகள் :

ஆன்டிபயாடிக் எடுப்பவராக இருந்தால், எளிதில் செரிமானமாகும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதிலும் இட்லி, சப்பாத்தி போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

புதினா :

ஒரு டம்ளர் நீரில் புதினா இலைகள், இஞ்சி மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, நீர் பாதியானதும் அதனை வடிகட்டி மூன்று நாளைக்கு ஒருமுறை குடித்து வர வேண்டும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி செய்வது மிகவும் இன்றியமையாதது. அதிலும் தினமும் தவறாமல் செய்து வர வேண்டும்.

கற்றாழை ஜூஸ் :

வைட்டமின் ஏ, சி, ஈ, ஜிங்க் மற்றும் செலினியம் நிறைந்தவை ஆன்டிபயாடிக்கின் பக்கவிளைவுகளில் இருந்து தடுக்கும். இத்தகையவை கற்றாழை ஜூஸில் உள்ளது. எனவே கற்றாழை ஜூஸ் காலையில் குடித்து வாருங்கள். இதனால் இரைப்பையை சுற்றியுள்ள படலம் பாதுகாக்கப்படும்.

ஆளி விதை :

ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும் போது மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஆளி விதையை சாப்பிட வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக இயங்கப்படுவதோடு, வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுத்து, உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும்.

தவிர்க்க வேண்டியவைகள் :

ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும் போது, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சோடா பானங்களை அருந்துவது, சாக்லேட், சர்க்கரை கலந்து உணவுப் பொருட்கள், பால் பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், காரமான உணவுகள், டீ மற்றும் காபி போன்றவற்றை அதிகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.