சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுப்பது எப்படி?

சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுப்பது எப்படி? 

மனித உடலில் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுப்புறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே இரத்தத்தை சுத்திகரிப்பது தான். பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும்.

இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக இருக்கும். எனவே இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதோடு முக்கியமாக சிறுநீரை வெகுநேரம் அடக்கி வைக்கக்கூடாது, இப்படி செய்வதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு கடுமையான எரிச்சல் மற்றும் வலி இருக்கும். சில சமயங்களில் இரத்தம் கலந்து வரலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மில்லி கிராம் இருக்க வேண்டும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும். எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.  

பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான் வெளியேறாது. அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றி விடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும்.