கழுதைப்பால் குடித்தால் போதும்.. இந்த நன்மைகளை நீங்கள் பெறலாம் !

கழுதைப்பால் குடித்தால் போதும்.. இந்த நன்மைகளை நீங்கள் பெறலாம் !

சமீபகாலமாக கழுதைப்பால் குடிப்பது மக்களிடம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கூட தற்போது இந்த கழுதை பால் குடிப்பது கொஞ்சம் அதிகரித்து வருகிறது. இந்த கழுதைப்பால் நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்குமா அதில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது இதை பற்றி பார்ப்போம்.

கழுதைகள் ஈக்விடே குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பத்தில் குதிரைகள், வரிக்குதிரைகள் அடங்கும். உலகம் முழுவதும் மக்களால் வளர்க்கப்பட்ட பல்வேறு கழுதை இனங்கள் காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக கழுதைகள் பால் தேவைக்காக வளர்க்கப்பட்டுள்ளன. கழுதையின் பாலானது மருத்துவம் மற்றும் அழகுப் பொருட்கள் தயாரிப்புகளில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இருமல் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையாக கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஹிப்போகிரேட்டீஸ் இதை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
உலக அழகியான கிளியோபாட்ரா தன்னுடைய மென்மையான அழகான சருமத்தை பராமரிப்பதற்காக கழுதைப் பாலில் குளித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கழுதைப்பால் ஆனது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் தொற்று நோய்களுக்கு நாட்டுப்புற மருந்துகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டுப்பால், எருமைப்பால், பசுப்பால், செம்மறி ஆட்டு பால், ஒட்டகப்பால் இவைகளை ஒப்பிடும் பொழுது கழுதையின் பால் தாய்ப்பாலை போல மிகவும் ஒத்திருக்கிறது. முதன்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அனாதை குழந்தைகளுக்கு இந்த கழுதைப்பால் தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

கழுதைப் பாலில் உள்ள ஊட்டச்சத்து தாய்ப்பாலை போல ஒத்திருக்கிறது. இந்தப் பாலில் வைட்டமின்கள் தாதுக்கள் புரதம் காணப்படுகிறது கொழுப்பு குறைவாக உள்ளது மற்ற விலங்குகளின் பாலை விட இதில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.100 மில்லி கழுதைப்பால் 49 கலோரிகள், 2 கிராம் புரோட்டின், 6 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் கொழுப்பு, 23% வைட்டமின் டி, 7 சதவிகிதம் கால்சியம், 2 சதவிகிதம் ரிபோபிளேவின் காணப்படுகிறது.

பாலில் உள்ள பெரும்பான்மையான புரதங்கள் கேசின் மற்றும் வே புரதங்களின் இருந்து வருகின்றன. கழுதை பாலில் உள்ள வே புரதம் அதனுடைய ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய சக்தி கொண்டது. கழுதைப்பால் குடிப்பவர்கள் பெரும்பாலும் அதனுடைய ஆரோக்கிய நன்மைகளுக்காக குடிக்கிறார்கள். பொதுவாக இந்தப் பால் ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவாக இருந்து வருகிறது. பசுவின் பாலானது ஒரு சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தும். ஆனால் இப்படிப்பட்ட ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு கழுதை பால் குடிக்கும் பொழுது அந்த ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதில்லை.

கழுதைப்பாலை உணவாக எடுத்துக் கொள்வதை விட அழகு சாதனப் பொருள்களில் மூலப் பொருளாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கழுதைப் பாலில் இருக்கக்கூடிய புரதங்கள் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதால் இது ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர் ஆக செயல்படுகிறது. கழுதைப்பாலில் இருக்கக்கூடிய ஒரு சில புரதங்களும் ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது. இவை சூரிய ஒளியால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்கிறது. விரைவாக வயது முதிர்வு ஏற்படுவதையும் இது தடுக்கிறது. சருமத்திற்கு பயன்படுத்த கூடிய கிரீம்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், சோப்புகள், ஷாம்புகள் போன்றவற்றில் கழுதைப் பாலை முக்கிய மூலப்பொருளாக சேர்த்து தயாரிக்கிறார்கள்.
 
கழுதைப் பாலில் பிஹெச்(PH) அளவானது தாய்ப்பாலின் பிஹெச் அளவோடு ஒத்துப்போகிறது. தாய்ப்பாலின் பிஹெச் அளவு 7ல் இருந்து 7.5 ஆக இருக்கும். கழுதைப்பால் பிஹெச் அளவு 7 இல் இருந்து 7.2 ஆக இருக்கும். எனவே குழந்தைகளுக்கும் இந்த கழுதைப்பால் பாதுகாப்பானது. கழுதைப்பால் கொண்டு தயாரிக்கப்பட கூடிய குளியல் சோப் ஆன்லைன் விற்பனை தளங்களில் 100 கிராம் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தற்போது இந்த கழுதைப்பால் விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 50 மில்லி கழுதைப்பால் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தப் பாலை விற்கும் இவர்கள் கூறும் பொழுது இந்த பாலை தொடர்ந்து ஏழு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வரும் பொழுது ஜீரண சக்தி மேம்படும். ஆஸ்துமா நோய்கள் வராது. குழந்தைகளுக்கு ஒரு சங்கு கொடுத்தால் போதும். பெரியவர்களுக்கு 50 மில்லி கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து 10 வருடங்களாக இந்த கழுதைப்பால் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் செல்லும் ஊர்களில் எல்லாம் இந்த கழுதை பாலுக்கு அமோக வரவேற்பு இருக்கிறதாம்.

இந்த கழுதைப் பாலில் இருக்கக்கூடிய லாக்டோஸ் நம்முடைய உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். இந்த பாலை அடிக்கடி குடிக்கும்பொழுது உயிரணுக்களில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி அதிகரிக்கும். இது ரத்த நாளங்களை சரியாக்கி ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த கழுதைப்பால் அவ்வளவு எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்காது. ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும். எந்தெந்த இடங்களில் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு அந்த இடங்களில் உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி வாங்கி அருந்தலாம். அதுமட்டுமில்லாமல் இந்த கழுதைப் பாலைக் காய்ச்சாமல் பச்சையாக குடிக்கக்கூடாது. பச்சை பாலில் சில நேரங்களில் பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் இருக்க வாய்ப்புண்டு. உங்களுக்கு அருகில் இந்த கழுதைப்பால் கிடைக்காமல் இருந்தால் கழுதை பால் பவுடராக கிடைக்கிறது அதை வாங்கி பயன்படுத்துங்கள்.