பனீர் – சைவர்களின் வரப்பிரசாதம் !!!

பனீர் – சைவர்களின் வரப்பிரசாதம் !!!!

பனீர் இன்றைக்கு பெரும்பாலோரால் விரும்பப்படும் முக்கியமான உணவுப் பொருள். பனீர் பட்டர் மசாலா, பனீர் 65, பனீர் பலாக் என்று எத்தனையோ விதங்களில் பனீர் சமைத்து இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் அமுக்கினால் மிருதுவாகவும், பார்ப்பதற்கு கெட்டியாகவும் மிகவும் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும்.

சைவ உணவினை உண்பவர்களுக்கான வரப்பிரசாதம் என்றே இதனைக் கூறலாம். இது அதிகளவு புரதத்தையும், கொழுப்பினையும் கொண்டுள்ளது. பெரும்பாலானோர் இதனை இன்றைக்கு வீடுகளில் தயார் செய்து பயன்படுத்துகின்றனர்.

பனீரானது தெற்காசியா நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

பனீரானது ஆப்கான் மற்றும் ஈரானிய படையெடுப்பாளர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பனீரினை தயார் செய்யும் முறை :

பனீரினை தயார் செய்ய முதலில் பாலானது நன்கு காய்ச்சப்படுகிறது. மிதமான சூட்டில் உள்ள பாலில் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்க்கப்படுகிறது.

பாலில் உள்ள திடப்பொருட்கள் திரட்சியாகி கட்டி கட்டியாக மாறுகிறது. பாலின் உள்ள திரவமானது தனியே பிரிந்து விடுகிறது.

இதனை மெல்லிய துணியில் வடிகட்ட திடப்பொருள் மேலேயும், திரவமானது கீழேயும் வருகிறது.

பனீரை வடிகட்டும் போது
திடப்பொருளை தனியே பிரித்து எடுத்து அழுத்திற்கு உட்படுத்தும் போது பனீர் கிடைக்கப் பெறுகிறது.

அழுத்தத்திற்கு உட்பட்ட பனீர்
பனீர் துண்டுகள் கீழே விழும் திரவமானது உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக சப்பாத்தி, பூரி மாவு பிசையும்போது உபயோகிப்பது.

பனீரினைத் தயார் செய்யப் பயன்படுத்தும் பாலினைப் பொறுத்து அதனுடைய தரம் இருக்கும். பெரும்பாலும் பசும்பாலே பனீரினைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பனீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

பனீரில் விட்டமின் ஏ, பி2 (ரிபோஃப்ளோவின்), பி5( நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி12 (கோபாலமைன்) ஆகியவை உள்ளன.

இதில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், செலீனியம் ஆகியவை உள்ளன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.

பனீரின் மருத்துவப் பண்புகள் :

கட்டுமஸ்தான உடலினைப் பெற
100 கிராம் பனீரில் 18 கிராம் புரதச்சத்து உள்ளது. ஜிம்மில் பயிற்சி பெற்று கட்டுமஸ்தான உடலினைப் பெற விரும்புபவர்களுக்கு அதிக புரதச்சத்து தேவைப்படும்.

அவர்கள் தினசரி உணவில் பனீரினைச் சேர்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இடைவேளை உணவாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

இதனால் வயிறு நிரம்பி பசி ஏற்படும் உணர்வு குறைக்கப்படும். எனவே அதிக பயிற்சி செய்பவர்கள் பனீரினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உறுதியான பற்கள் மற்றும் எலும்புகளைப் பெற :

பனீரில் உள்ள கால்சியமானது உறுதியான பற்கள் மற்றும் எலும்புகள் வளர்ச்சிக்கு அவசியமானது. பனீரானது ஈறு சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பனீரானது குறைந்தளவு லாக்டோஸினைக் கொண்டு உள்ளதால் பற்சிதைவு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

சீரான வளர்ச்சிதை மாற்றத்தினைப் பெற :

பனீரானது உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கக்கூடியது. அதே நேரத்தில செரிமானத்தைச் சீராக்கி அதிக கொழுப்பினை உடலில் சேரவிடாமல் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.

மேலும் இதில் அதிகளவு காணப்படும் லினோலியிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது. இதனால் கொழுப்புக்கள் நரம்புகளில் சேகரமாவது தடுக்கப்படுகிறது. எனவே சைவர்களின் வரப்பிரசாதம் பனீர் என்று இதனைக் கூறலாம்.

உடல்வலி மற்றும் மூட்டுவலியைக் குறைக்க :

பனீரானது உடல் வலியைக் குறைப்பதோடு கீழ்முதுகில் ஏற்படும் வலியினையும் குறைக்கிறது. இதில் காணப்படும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமிலங்கள் கீழ்வாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படும் முதியவர்களுக்கு சரியான தீர்வினை வழங்குகின்றன.

பொதுவாக ஒமேகா 3 மற்றும் 6 அமிலங்கள் மீன்களில் காணப்படுகின்றன. சைவ உணவினை உண்பவர்கள் பனீரினை உண்டு ஒமேகா 3 மற்றும் 6-னினைப் பெறலாம்.

பனீரானது ஒமேகா 3-னைக் கொண்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் இதனை உண்டு தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க :

பனீரானது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து உடலினை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தைகளில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.

அறிவாற்றலை அதிகரிக்க :

பனீரில் உள்ள பி தொகுப்பு விட்டமின்கள் குழந்தைகளில் குறுத்தெலும்பு வளர்ச்சியினை ஊக்குவிப்பதோடு வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. அத்தோடு குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிப்பதோடு ஞாபத்திறனையும் மேம்படுத்துகிறது.

சருமம் பளபளக்க :

பனீரில் உள்ள விட்டமின்கள் மற்றும் செலீனியம் சருமத்தைப் பாதுகாத்து பளபளக்கச் செய்கிறது. ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பனீரினைப் பற்றிய எச்சரிக்கை :

பனீரானது அதிகளவு கொழுப்புச் சத்தினைக் கொண்டுள்ளதால் இதனை அளவோடு சாப்பிட வேண்டும்.

இதில் உள்ள சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நலம்.

தரமில்லாத பனீரினை உண்ணும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

சைவர்களின் வரப்பிரசாதமான பனீரினை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.