மூட்டுவலி

 மூட்டுவலி  


     இன்றைய காலச் சூழ்நிலையில் மூட்டுவலி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகி விட்டது. நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே மனிதர்களை வாட்டும் நோய்களில் மூட்டு வலி முக்கியமான ஒன்றாக உள்ளது.  

      இதற்குக் காரணம் நாம் கடைபிடிக்கத் தவறிய சில நல்ல பழக்கவழக்கங்களே... நாம் நல்லெண்ணெய் கொண்டு சமைத்து    சாப்பிட்டவரை மூட்டுவலி என்பது நமக்கு அரிதான ஒன்றாக இருந்தது. நிறைய நல்ல விஷயங்களை நாம் மறந்தோம். அதன் விளைவாக அதிகம் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றோம்.

        பொதுவாக நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருட்களுமே நாளடைவில் தேய்மானமாகி அதன் செயல்திறன் குறைகின்றது. அதுபோல்தான் நமது உடலும், வயது அதிகமாக உடல் உறுப்புகளும் தேய ஆரம்பித்துவிடுகின்றன. இதனால் உடலில் பலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை உள்ளடக்கியதே மூட்டுவலியாகும்.

 

 மூட்டுவலி என்றால் என்ன ?

    நமது உடல் உறுப்புகள் தேய ஆரம்பித்து அதன் காரணமாக, நமது உடலிலுள்ள மூட்டுக்களும் தேய்வதாலும் இரு மூட்டுகளிடையே உள்ள, சுரப்பிகளின் வழவழப்புத் தன்மை குறைந்து கடினமாவதாலும், மூட்டுக்களில் வலி ஏற்படுகிறது. இதனையே நாம் மூட்டுவலி என்கிறோம்.

      மூட்டுவலி என்றவுடனே நமக்கு நினைவிற்கு வருவது நமது முழங்கால்களில் ஏற்படும் வலியும், வீக்கமும் தான்.மேலும் இவ்வலியானது நமது உடலிலுள்ள கை, கால், விரல் ஆகிய அனைத்து மூட்டுகளிலும் ஏற்படுகிறது.

 

மூட்டுவலியின் தன்மைகள். 

      முதலில் தசைகளில் இனம்புரியாத வலி காணப்பட்டு, அதன் பிறகு மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டு, வீக்கம், குத்தல்வலி, மூட்டுகளை அசைக்க முடியாமை, கை, கால் மரத்துபோதல் உணர்ச்சிக் குறைவு, தலைச்சுற்றல், வயிற்றில் மந்தம், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றது.இதனால் கை, கால்கள் நீட்டி மடக்க முடியாமை ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

       ஆரம்ப மூட்டுவலிக் காலங்களில் காய்ச்சல் இருக்காது, அதன் பிறகு வியாதி முற்றும்போது பல மூட்டுகளும் பாதித்து காய்ச்சல் தாக்கும். இதனால் கைகளும், கால் பாதங்களும் உருமாற்றம் அடையும்.இந்த மூட்டுகளில் உள்ள நீர்வீக்கங்களை விரல்களால் அமுக்கினால் அந்த இடத்தில் பள்ளம் விழும்.

 

 மூட்டுவலி வரக் காரணங்கள்.

v   கடினமான வேலை செய்வதாலும், மூட்டுக்களை அதிகம் பயன்படுத்துவதாலும், பாதிப்புகள் வரலாம்.

v   பாக்டீரியாக்கள் தொந்தரவினாலும் மூட்டுவலி வரலாம்.

v   மூட்டுவலி வர பரம்பரையும் ஒரு காரணமாக அமைகிறது.

v   சிறுநீரகச் செயல்பாடு குறைவினாலும் இந்நோய் வரலாம்.

v   தவறான இல்லற நடத்தையின் காரணமாகவும் மூட்டு வலி வரலாம்.

v    அடிக்கடி குளிர்க்காற்றில் செல்லுதல், மழையில் நனைதல், பனியில் இருத்தல் ஆகியவைகளும் ஒரு காரணமாக அமைகின்றது.

v    மூட்டுகளில் உள்ள திசுக்கள் மற்றும் சவ்வு பசையை இழந்துவிடுவதன் காரணமாகவும் வருகின்றது.

v    இரு எலும்புகள் ஒன்றோடொன்று உராய்வதாலும் மூட்டுவலி ஏற்படுகின்றது.

 

 மூட்டு வலியினால் ஏற்படும் பாதிப்புகள்.

    நோய் அதிகரிக்க பெரும் மூச்சு சோர்வு, நாடித் தளர்தல், மார்பு துடித்தல், அடிக்கடி மனக்கவலை, உடல் களைப்பு மிகக் குறைந்தளவில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியன ஏற்படும்.

     ▪️இந்நோயால் அந்திமக் கட்டத்தில் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து, கழிவுப் பொருட்களை வெளியேற்றாமல் மீண்டும் இரத்தத்தில் கலந்து உயிருக்குக் கூட ஆபத்தை ஏற்படுத்தும்.

    ▪️மேலும் இந்நோய்க்கு நிரந்தர தீர்வாக ,உரிய மருத்துவம் செய்யப்படாமல் இருந்தால் உடலில் இரத்தம் கெட்டு, அந்தக் கெட்ட இரத்தம் இதயத்தினுள் செல்லுவதன் காரணமாக இதயமும் பாதிக்கப்படுவதனுடன் இருதய நோயும் வரலாம், இதனையே ஆங்கிலத்தில் “ருமாட்டிச இருதய நோய்” என்றழைக்கின்றனர்.

 

சித்த மருத்துவத்தின் தீர்வு 

     ▪️நமது சித்த மருத்துவத்தில் எந்த நோய்க்கும் மருந்து உண்ணும் முன்பு பேதிக்கு மருந்து கொடுத்து, வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றியப் பின்பு, மற்ற சிகிச்சையை ஆரம்பிக்கும் முறையுள்ளது. இதனால் உடலுக்கு நன்மைகள் உண்டாக்குகின்றது.

 

  சித்த மருத்துவ சிகிச்சை 

     ▪️சித்த மருத்துவத்தில் மூட்டுவலிக்கு சிகிச்சைக் கொடுக்கும் முன்பாக, கழிவு நீக்கம் என்னும் முறை செய்யப்படுகின்றது. இம்முறையானது வயிற்றில் உள்ள கழிவுகளை மட்டும் அகற்றாமல், உடலிலுள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகின்றது.

     ▪️இதனால் உடலிலுள்ள வாத, பித்த, கப தோஷங்களை நீக்கி, உடல் தன்னிலையடைகின்றது. இதன் மூலம் ஜீரண உறுப்புகளில்  சீரான இயக்கம் நடைபெற்று, உடலிலுள்ள வாத நீர், கெட்ட வாயு மற்றும்  இரத்தத்தில் உள்ள கிருமிகளை வெளியேற்றுவதுடன் மலச்சிக்கலையும் கலைகின்றது.

    ▪️ சித்த சிகிச்சையின் போது உள்ளக்குள் தரப்படும், மூலிகை மருந்துகளாலும், வெளியில் தடவ கொடுக்கும் சிறப்புமிக்கத் தைலங்களாலும், உடல் நல்ல முறையில் வேலை செய்து, மூட்டுவலியை சிறப்பான முறையில் குணப்படுத்துகின்றது.