கருப்பட்டியில் போலி எது? உண்மை எது? என்பதை எவ்வாறு கண்டறிவது...?
கருப்பட்டியில் போலி எது? உண்மை எது? என்பதை எவ்வாறு கண்டறிவது?
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி வெல்லம். இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரினை காய்ச்சுவது மூலம் இந்த வெல்லம் கிடைக்கிறது.
1. கரிப்பு + இனிப்பு
கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.
2. கருப்பும் பழுப்பும் கலந்த நிறம்
முழுக் கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.
3. இளகக் கூடாது
கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித் தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது தான் உண்மையானது.
4. வெள்ளை புள்ளிகள்
நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
5. விரைவில் கரையக் கூடாது
ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.
6. மோதிப் பார்த்தால் கணீரென்ற சத்தம் வரக்கூடாது
தேங்காயைத் தட்டிப் பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி.
7.பளபளப்பாக இருக்க கூடாது
கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலியானது என கண்டுபிடிக்கலாம்.