காயங்களை போக்கும் கற்றாழை!

காயங்களை போக்கும் கற்றாழை

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரம்,  கற்றாழை. ஏதேனும் வெட்டுக்காயமோ, தீக்காயமோ ஏற்பட்டால், உடனடி நிவாரணத்துக்குக் கற்றாழை உதவும்.

மாதவிடாய் வலிக்கு

கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஏழு முறை குழாய் நீரில் நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.

தோல் பிரச்சினைகளுக்கு

தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டிஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.

முகப் பொலிவிற்கு

கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

காயம் தழும்பில்லாமல் விரைவில் ஆற

சிறுவர்கள் விளையாடும்போது அடிபட்டு, சிறிய புண்கள் ஏற்படும். அதன் மீது கற்றாழை ஜெல் தடவிவர, காயம் விரைவில் ஆறும்.

தலைமுடி நன்றாக வளர

கற்றாழையை நன்றாகக் கழுவி, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தொடர்ந்து தலைமுடியில் தேய்த்துக் குளித்துவந்தால், நன்றாக முடி வளரும். பொடுகு நீங்கும்.

அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்

காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய  எட்டு அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 

கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது, பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சளிப் பிரச்சனை இருப்பவர்கள், சைனஸ் இருப்பவர்கள், குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் அடிக்கடி கற்றாழை சாப்பிடக் கூடாது.