நிலவேம்புக் குடிநீர் எப்படித் தயாரிக்க வேண்டும்.?

நிலவேம்புக் குடிநீர் எப்படித் தயாரிக்க வேண்டும்.?

நிலவேம்புக் குடிநீர் பற்றி 'சித்த வைத்திய திரட்டு' என்ற நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு பொருளும் மக்களிடையே பிரபலமாகும் போது, அதற்கு இணையாக போலிகள் உருவாவதையும்  தடுக்க முடியாது. அது, நிலவேம்புக் குடிநீருக்கும் பொருந்தும். அதற்கு முன்பாக, உண்மையில் நிலவேம்புக் குடிநீர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அதன் மருத்துவக் குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மூலப்பொருள்கள் :

நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.

தயாரிக்கும் முறை :

இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம் தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது எட்டு அல்லது 16 மடங்கு என அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும்.

அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார்.

எப்படிக் குடிக்க வேண்டும்?

நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல, முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, அடுத்த நாள்வரை வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது. குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக் கூடாது.

எப்போது, எவ்வளவு குடிக்கலாம்?

நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15 மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் உட்கிரகித்துக் கொள்ளும்.

மருத்துவக் குணங்கள் :

இந்த ஒன்பது மூலப்பொருள்களில் நோய் தீர்ப்பதில் நிலவேம்புக்குத்தான் முக்கியப் பங்கு உள்ளது. இதனால்தான் இதை நிலவேம்புக் குடிநீர் என்கிறோம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது.

கோரைக்கிழங்கு , பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும். 'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்' என்பது நம் முதுமொழி. இதன் மூலம் மிளகு எந்தளவுக்கு விஷ முறிவாகச் செயல்படுகிறது என்பதை அறியலாம்.
வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம் ஆகியவை உடல் ஜுரத்தால் ஏற்படும் சூட்டைத் தணிக்கும். சுக்கு, மிளகு ஆகியவை உடல் சூட்டை அதிகரிக்கும் இயல்பு உடையது. ஆனால், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம் ஆகியவை இந்த சூட்டைத் தணித்து சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

சந்தன மரத்தின் மேல்பட்டையில் இருந்து இதற்கான சந்தனம் எடுக்கப்படுகிறது. இதிலும் சந்தனத்தில் உள்ள அதே மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, உடல் சூட்டைத் தணிக்கும் சந்தனத்தின் பண்பு இவற்றுக்கும் உள்ளது.

என்ன செய்யலாம்?

இப்படி, நோய்களைத் தீர்க்க கிடைத்த அரிய வரப்பிரசாதமான நிலவேம்புக் குடிநீர் சரியாகவும் தரமாகவும் இல்லாவிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது. நாம் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே நோய் தீர்க்கப் பயன்படுமா என்பது மருந்துகளின் சேர்க்கை மற்றும் அதன் தயாரிப்பு முறையைப் பொறுத்தது. எனவே, கடைகளில் விற்கப்படும் நிலவேம்புப் பொடி அரசால் அங்கீகரிக்கப்பட்டதா? அதில் என்னென்ன மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையெல்லாம் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது. மேலும், நிலவேம்புக் குடிநீர் அரசு மருத்துமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்" என்கிறார்.