மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை வைத்தியங்கள்..!

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்...

100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள் நீங்கும்.

புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்று வேளையும் அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.

 20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும்.

சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அருகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.

சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.

மாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும். 

 கோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.

 மாதவிலக்கு ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு திராட்சைச் சாறு நல்ல தீர்வு.

 மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.

 வல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டித் தூளுடன் சுக்கு 5 கிராம், சோம்பு 5 கிராம் தட்டிப்போட்டு 200 மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.