பாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா?

பாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா?  

 
பாதங்களில் எரிச்சல் உணர்வு  என்பது பொதுவான பிரச்சனை மற்றும் இது அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சனையும் கூட. இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். இப்படி பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்பு அல்லது கோளாறுகள் காரணமாக இருக்கலாம்.

சில சமயங்களில் இந்த பிரச்சனை சர்க்கரை நோய், நாள்பட்ட குடிப்பழக்கம் மற்றும் குறிப்பிட்ட டாக்ஸின்களின் தாக்கம் போன்றவற்றால் கூட ஏற்படலாம். அதோடு பி வைட்டமின், ஃபோலிக் அமிலம், தையமின் அல்லது கால்சியம் குறைபாடுகள், காயங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், புற வாஸ்குலர் நோய்கள் போன்றவற்றாலும் பாதங்களில் எரிச்சலை சந்திக்கலாம்.

ஒருவரது பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், அவர்களது பாதங்கள் வீங்கியோ, சிவந்தோ, தோல் உரிந்தோ, சரும நிறம் சற்று மாறுபட்டோ, தாங்க முடியாத எரிச்சலையோ சந்திக்க நேரிடும். இப்பிரச்சனையில் இருந்து விடுபட, ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. ஒருவேளை உங்களால் தாங்க முடியாத அளவில் எரிச்சல் உணர்வை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சரி, இப்போது பாதத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும் சில எளிய வழிகளைக் காண்போம். அதைப் படித்து பின்பற்றி, எரிச்சல் உணர்வில் இருந்து விடுபடுங்கள்.

குளிர்ந்த நீர் :
குளிர்ச்சியான நீர் பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான வாளியில் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள். ஆனால் ஐஸ் கட்டிகளையோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்த நீரையோ நேரடியாக பாதங்களில் பயன்படுத்தாதீர்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் :
ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் pH அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இல்லையெனில், ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் :
மஞ்சளில் உள்ள குர்குமின், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும். அதற்கு 2 டீஸ்பூன் மஞ்சளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை என சில நாட்கள் பின்பற்ற தீர்வு கிடைக்கும்.

எப்சம் உப்பு :
எப்சம் உப்பு பாதங்களில் உள்ள எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். எப்சம் உப்பு நரம்புகளின் செயல்பாட்டிற்கு உதவும். அதற்கு ஒரு அகலமான வாளியில் 1 1/2 கப் எப்சம் உப்பு போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து, அந்நீரினுள் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த முறை சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.

இஞ்சி :
இஞ்சி பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். ஏனெனில் இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் பாதங்கள் மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள்.

பாகற்காய் :
ஆயுர்வேதத்தில் பாகற்காய் கால் எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு ஒரு கையளவு பாகற்காய் இலைகளை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு நீங்கும்.

தைம் :
தைம் கீரை கூட பாத எரிச்சல் உணர்வை சரிசெய்ய உதவும். அதற்கு ஒரு கையளவு தைம் கீரையை 2 பௌல் நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அகலமான வாளியில் சுடுநீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். மற்றொரு வாளியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாளியிலும் பௌலில் ஊற வைத்துள்ள தைம் கீரையை நீருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு பாதங்களை முதலில் சுடுநீர் நிரப்பிய வாளியில் 3-5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீர் நிரப்பிய வாளியில் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை செய்து வர பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

வைட்டமின் பி3 :
வைட்டமின் பி3 என்று அழைக்கப்படும் நியாசின், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நரம்புகளை வலிமைப்படுத்தவும், நரம்புகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும், பாதங்களில் எரிச்சல் உணர்வை அனுபவிக்கக்கூடும். ஆகவே முழு தானிய பொருட்கள், பால், தயிர், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை மற்றும் முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மசாஜ் :
பாதங்களுக்கு சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுவும் வெதுவெதுப்பான தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயால் பாதங்களுக்கு குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். அதுவும் இரவு தூங்கும் முன் மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.