தாமரை பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

தாமரை பூவில் இவ்வளவு நன்மைகளா?  

தாமரை

தாமரைக்கு அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோசனம், சலசம், கோகணம், வாரிசம் என்று ஏகப்பட்ட பெயர்கள் உண்டு! இந்தியாவை விட சீனாவில் தாமரையை பலவிதமான மருந்துகளில் சேர்க்கிறார்கள். தாமரையின் விதை, தண்டு, கிழங்கு போன்றவற்றை சீனர்கள் பச்சையாகவே உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.மனித உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்கு செய்வதிலும், மனஅமைதி தருவதிலும் தாமரைக்கு இணை ஏதும் இல்லை என்கிறார்கள் சீனர்கள்.

தாமரையில் உள்ள சத்துக்கள் :

லினோலிக் ஆசிட், புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின்-பி, பொட்டாஷ், தாமிரம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், இதில் சர்க்கரையோ கொழுப்போ கிடையாது.

தாமரை இதழ்களின் மருத்துவ குணங்கள் :

தாமரை இதழ்களுடன், அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலைகளைச் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து, தலைக்கு தேய்த்துவர இளநரை மாறும். முடி உதிர்வதும் குறையும். தாமரை இதழ்களை நீரில் வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் சூடு தணியும். சிறுநீரகத் தொற்றுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும். சருமம் பளபளக்கும். தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சீராகும்.

மகரந்தமும் மருந்தே :

தாமரை பூவின் மகரந்தத்தை தேனில் குழைத்து உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வயிற்றுப் புண் ஆறும்.

விதைகளையும் விடாதீர்கள் :

தாமரையின் விதைகள் கரிய நிறத்தில், கடினமானவையாக இருக்கும். இவற்றை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிடலாம்.இவை உங்கள் இதயத்துக்கு வலிமை சேர்க்கும்.

தாமரையின் தண்டும் தரமானதே:

தாமரையின் தண்டை குறுக்கு வசமாக வெட்டினால் நான்கு துளைகள் கொண்ட சிப்ஸ்களாகக் கிடைக்கும்.தாமரை தண்டை காய்கறி சாலெட்டுடன் சேர்த்து பச்சையாகவே சாப்பிடலாம். இதில் உப்பு ஏறாது என்பதால் அத்துடன், சோள மாவு, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்துப் பிரட்டி சிப்ஸ் போல எண்ணையில் பொரித்து சாப்பிட்டாலும் சுவையுடன் இருக்கும்.

கடைசியாக ஒரு ஆன்மீக செய்தி :

தாமரைத்தண்டை வெய்யிலில் உலர்த்தி வெட்டினால் அதனுள் பஞ்சு போன்ற ஒரு நார் இருக்கும் அதை எடுத்து பூஜை அறையில் விளக்கேற்ற பயன்படுத்தினால், அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.