குப்பையில் கிடைக்குது கோமேதகம்!

குப்பையில் கிடைக்குது கோமேதகம்!

குப்பைமேனிக் கீரை பெயரே சொல்வது போல் சாதாரணமாக தெரு ஓரங்களில் வளரக்கூடியது. ஆனால், அபாரமான நலன்கள் கொண்டது. நோயை ஆற்றுவதும், வராது தடுப்பதும் இந்த மூலிகைக் குலத்துக்கு பிறவிக்குணமான ஒன்று. சித்த மருத்துவ இலக்கியத்தில் அரிமஞ்சரி’ என்றும், நாட்டார் வழக்காற்றியலில் ‘பூனைவணங்கி’ என்றும் பேசப்படும் இந்த மூலிகை, வரப்பு ஓர வரப்பிரசாதம்.

*வெளி உபயோகம் மட்டும் அல்லாது உள்மருந்தாகவும் பயன் தரக்கூடியது. நெஞ்சுச் சளியுடன் வீசிங் எனும் இரைப்பும் தரும் நிலையில், குப்பைமேனி ஒரு சிறந்த கோழை அகற்றியாகச் செயல்படும்.

*கொசுக்கடி அல்லது அலர்ஜி காரணமாக தோலில் ஏற்படும் தடிப்புக்கும், குப்பைமேனியின் இலைச் சாற்றை, தேங்காய் எண்ணெயில் சேர்த்துக்  கொதிக்கவைத்துத் தடவலாம்.

*இதன் இலைச் சாற்றைக் கொடுக்கும்போது, சில நேரத்தில் உடனடியாக வாந்தி எடுக்கவைத்து, அதனுடன் கோழையையும் வெளியேற்றும் இயல்பு  குப்பைமேனிக்கு உண்டு.

*குப்பைமேனியின் உலர்ந்த பொடியை ஒரு கிராம் வெந்நீரில் அல்லது தேனில் கலந்து கொடுக்க, கோழை வருவது மட்டும் அல்லாமல், இருமலும் உடனடியாகக் கட்டுப்படும். மூக்குத்தண்டில், நெற்றியில் கபம் சேர்ந்து வரும் தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். 

உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.

*கால் அரையிடுக்குகளில் கடும் அரிப்பைக் கொடுத்து, சில நாட்களில் அந்த இடத்தைக் கருமையாக்கி, பின் அந்தத் தோல் தடிப்புற்று, அடுத்த சில மாதங்களில் தடித்த இடம், அரிப்போடு நீர்ச்சுரப்பாக மாறும் பூஞ்சைத் தொற்றுக்கு, குப்பைமேனியும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

*குப்பைமேனியை, சுண்ணாம்புடன் கலந்து போட வீக்கம் குறையும், விஷத்தை முறிக்கும் புண்ணுக்கும் போடலாம்.

*குப்பைமேனியை விளக்கெண்ணையில் வதக்கி மூட்டு வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போடும்போது வலியை குறைக்கும், வீக்கத்தை  குறைக்கும்.

*குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து  அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.

*உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி உடலுக்கு தேய்த்து வந்தால் உடல் வலி தீரும்.

*குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயம் பட்ட இடங்களுக்கு தடவினால் காயம் விரைவில் குணமாகும்.

*புழுக்கொல்லி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் புழுக்களும் அதன் முட்டையும் முழுமையாக வெளியேறாது. இரவு எல்லாம்  ஆசனவாயில் அரிப்புடன் இருக்கும். குழந்தைகளுக்கு, ஒரு டீஸ்பூன் குப்பைமேனி இலைச்சாறை மூன்று நாட்கள் மாலையில் கொடுக்க,  புழுத்தொல்லை தீரும். மலக்கட்டை நீக்கி, மாந்தம் நீக்கி, சீரணத்தை சரியாக்கி, அதன் மூலம் புழு மீண்டும் வராது.

*குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி தீரும். உடல் குளிர்ச்சி பெறும்.

* மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும். மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டு வர குணமாகும்.