பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் பொடுதலைக்கீரை !!

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் பொடுதலைக்கீரை !!

பொடுதலைக்கீரை தரையோடு படர்ந்திருக்கும் ஆறு, குளம் குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

பொடுதலைக்கீரை பார்ப்பதற்கு திப்பிலிப் போல இருக்கும். அனைத்து வகையான மூல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள் நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் பலவீனம், உடலில் உண்டாகும் கட்டிகள், வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

உடலில் எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலி தான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும். இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும். 

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும். 

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் அல்லது காலை, மாலை இரு வேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். 

பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றவர்கள், பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெய்யில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.