வெயில் நேரத்தில் ஆரோக்கியத்தை மீட்டு எடுக்கும் குளிர்பானம் மோர்...

தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

முந்தைய காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களுக்கு காபி, டீ கொடுப்பதற்கு பதிலாக மோர் கொடுப்பார்கள். சொல்லப்போனால் அக்காலத்தில் மோர் இல்லாத வீடுகளே இருக்காது. மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.

அதுவும் மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து, உடல் ஃபிட்டாக இருக்கும். இப்போது தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

செரிமானம் மேம்படும் :

நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். பின் மோர் வயிற்றைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கும். மேலும் மோர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் : 

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், மோரில் கொலஸ்ட்ராலை குறைவாக பராமரிக்க உதவும் பயனுள்ள மூலக்கூறுகள் உள்ளன. மேலும் ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்த அழுத்தம் குறையும் :

மோரில் உள்ள MFGM என்னும் பயோ ஆக்டிவ் புரோட்டீன், கொலஸ்ட்ராலை எதிர்க்கும் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். மோரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் வளமாக இருப்பதோடு, பொட்டாசியம், புரோட்டீன் போன்றவைகளும் உள்ளது. அதே சமயம் மோரில் உணவை ஆற்றலாக மாற்றும், செரிமானம் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியமான ரிபோஃப்ளேவின் மற்றும் பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது.

அசிடிட்டியைத் தடுக்கும் :

மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் நிறைய உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். மேலும், மோர் அதிகப்படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

அஜீரண பிரச்சனை நீங்கும் :

நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டதால், மிகவும் அசௌகரியமான உணர்வைப் பெறுவீர்கள். அப்போது ஒரு டம்ளர் மோரில் சிறிது இஞ்சி சேர்த்து குடித்தால், அஜீரண பிரச்சனை நீங்கிவிடும். அதுவும் ஒருவர் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் நிச்சயம் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

உடல் வறட்சி :

உடல் வறட்சி மிகப்பெரிய பிரச்சனை. நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடல் வறட்சியால் அவஸ்தைப்படக்கூடும். இந்த உடல் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி என்றால், அது மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.

வயிற்றுப் போக்கு :

வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.