வாய் அல்சர் அல்லது வாய்ப்புண்

வாயில் அல்சர் என்பது வேறொன்றுமல்ல சற்று தீவிரமாக அதிகரித்த வாய்ப்புண் தான். 

கன்னக்கதுப்புகளிலும் உதட்டு ஓரங்களிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள். வாய்ப்புண் உடையவர்கள் தொடர்ந்து வாய்ப்புண்ணால் அவதிப்படுவதை காண முடியும். எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும் புளிப்பு சுவையையும் கூட இவர்களால் சுவைக்க முடியாது. வாய்ப்புண் வர பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையான சிலவற்றை கீழே பார்க்கலாம்.

வாய்ப்புண் ஏற்பட காரணங்கள்:

வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது.

சிலருக்கு பற்களின் அமைப்பு இயற்கையிலேயே மிகவும் கூர்மையாக இருக்கும் அல்லது ஏதேனும் விபத்துகளால் பற்கள் வடிவம் மாறிவிடும். இத்தகையவர்களுக்கு தொடர்ந்து அவர்களுடைய கூர்மையான பற்கள் வாயில் நாக்கில் உராய்ந்து காயங்களை ஏற்படுத்தி புண்ணை ஏற்படுத்தும்.

சில சமயம் வேறு ஏதாவது உடல் உபாதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் வீரியமான மருந்துகள் வாய்ப்புண்ணையும் வயிற்றுப் புண்ணையும் உருவாக்கி விடுகின்றன.

நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள் கண்டிப்பாக வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.

வாய்ப்புண் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் சில உணவுப் பொருட்களைக் கொண்டே இயற்கையான வழியில் நிவாரணம் காணலாம். அந்த இயற்கையான முறைகள் எவையென்று பார்ப்போம்.

1. தேங்காய்:
வாய்ப்புண் உள்ளவர்கள் பச்சைத் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் இரண்டு கீற்றுக்கள் தினமும் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் வாய்ப்புண் ஆறும். மேலும் தேங்காயைப் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நற்பலன்கள் கிடைக்கின்றன. தேங்காயை பால் எடுத்து அத்துடன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ப்ளர் அருந்தி வந்தால் மிகச் சிறந்த பலன்களைப் பெறலாம்.

2. கசகசா
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கான அருமருந்து. கசகசாவை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் ஆறும். குறிப்பாக கசகசாவை பானமாக தயாரித்து அருந்தும் போது மிகப்பெரிய அளவில் உடனடி பலன்களைத் தரும். கசகசா பானம் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: 
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரி - 4 பருப்புகள்
பாதாம் - 2 பருப்புகள்
தேங்காய் - 2 பெரிய வில்லைகள்
தேன் - 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
பால் - 1 டம்ப்ளர்

செய்முறை:

முந்திரி, பாதாம், கசகசா ஆகியவற்றை 6 மணி நேரம் முன்னதாகவே இளஞ்சூடான நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பாதாமின் தோலை உரித்து விடவும். கசகசா, முந்திரி, பாதாம், தேங்காய் இவையனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ளவும். 1 டம்ப்ளர் பாலில் அரைத்த விழுதையும் நாட்டுச் சர்க்கரையையும் தேனையும் கலந்து பருகவும். இது குடிப்பதற்கு மிக சுவையான பானமாக இருப்பதுடன் ஏராளமான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருகிறது. (குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து விடவும்).

3. கொய்யா
வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

4. தேன்:
தேனில் உள்ள புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும். இதனால் நிச்சயம் குணம் தெரியும்.

5. பால்:
வாய்ப்புண் உள்ளவர்கள் தினமும் பால் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பாலில் உள்ள பி காம்ப்ளக்ஸ் உயிர்ச்சத்துக்கள் வயிற்றுப் புண்ணுடன் அதன் தொடர்புடைய வாய்ப்புண்ணுக்கும் குணமளிக்கிறது. அதே போல சோயா பாலும் பசும்பாலுக்கு மாற்றான பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்த பானமாகும்.

6. வாழைப்பழம்:
கனிந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது அதிலுள்ள விட்டமின் பி6 மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் சத்துக்கள் வாய்ப்புண்ணை ஆற்றுவதோடு அதற்கு காரணமான உள்ளார்ந்த வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்துகிறது.

7. வாழைப் பூ:
வாழை மரத்தின் அனைத்து பாகங்களையும் உணவாகப் பயன்படுத்துவதே நமது இந்தியப் பாரம்பரியம். அதிலும் வாழைப் பூ வாய்ப்புண்ணுக்கும் வயிற்றுப் புண்களுக்கும் கை கண்ட மருத்துவமாகும். வாழைப் பூவை பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட்டு வர வேண்டும். மேலும் வாழைப் பூவை உரிக்கும் போது இறுதியில் எஞ்சும் சிறிய மொட்டை பச்சையாகவோ அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு விட்டால் உடனடியாக வாய்ப்புண் குணமாகும்.

8. நாவல் பழம்:
நாவல் பழத்தில் ஏராளமான இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் நிறைந்துள்ளது. இது வாய்ப்புண்ணை குணமாக்குவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்ததாகும்.

9. கட்டித் தயிர்:
நல்ல உணவுகளின் பட்டியலில் தயிருக்கு எப்போதும் முதலிடம் உண்டு. தயிரில் அடங்கியுள்ள ஏ, பி, சி கூட்டு விட்டமின்களும், ரிபோஃளோவின் மூலக்கூறுகளும் வாய்ப்புண்ணுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் சிறந்தது. தயிரில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளான அமிலத்தன்மை, வயிற்று மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றை ஆற்றுகிறது. தயிருடன் வாழைப்பழத்தையும் தேனையும் கலந்து ஸ்மூத்தியாக பருகும் போது மிக விரைவான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.

10. தக்காளி:
தக்காளியை ஜுஸாக பருகினாலும் அத்துடன் கேரட்டையும் தேனையும் சேர்த்து ஜுஸ் செய்து பருகினாலும் வாய்ப்புண் நீங்குவதோடு சருமமும் பளபளப்பை பெறும். அதிக குளிர்ச்சியான உடல்வாகுடையவர்கள் இதை தவிர்த்து விடவும்.

11. மணத்தக்காளிக் கீரை:
மணத்தக்காளிக் கீரையானது வயிற்றுப் புண்ணோடு அதன் விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் ஆற்றுகிறது. மணத்தக்காளி கீரையை பாசிப் பருப்பு சேர்த்து கூட்டாக செய்தோ அல்லது சூப்பாகவோ தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நாட்பட்ட வாய்ப்புண்ணும் வயிற்றில் அல்சரும் இருந்த இடம் தெரியாமல் மொத்தமாக குணமாகிவிடும். மணத்தக்காளி கீரைச் செடியில் சிறிய தக்காளி வடிவமுடைய சிறுசிறு பழங்கள் காய்க்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடைய இந்தப் பழங்களை பச்சையாக மென்று தின்றால் வாய்ப்புண்ணுக்கு அருமருந்தாக வேலை செய்யும்.

12. சோற்றுக் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜுஸ்:
சோற்றுக் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை சம அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். சோற்றுக் கற்றாழையில் உள்ள புண்ணை ஆற்றும் மருத்துவ குணங்களும் மற்றும் நெல்லியில் செறிந்துள்ள விட்டமின் சி யும் வாய்ப்புண்ணை குணமாக்கிவிடும்.

13. அகத்திக் கீரை:
அகத்திக் கீரைக்கும் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக் கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ பொறியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வர மிகச் சிறந்தப் பலன்களைத் தரும்.

14. சுண்டைக்காய்:
சுண்டைக்காயின் மருத்துவப் பலன்களில் மிக முக்கியமானது அதன் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை அகற்றும் தன்மையாகும். சுண்டைக்காயை மாதம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து வந்தால் இதிலிருக்கும் அபரிமிதமான இரும்புச் சத்து நோயெதிர்ப்பு சக்தியை கூட்டி பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

15. பொன்னாங்கன்னி கீரை:
பொன்னாங்கன்னியில் சீமை பொன்னாங்கன்னி நாட்டுப் பொன்னாங்கன்னி என்று இரு வகைகள் உண்டு. இரண்டுமே பெயருக்கேற்றார் போல தங்கமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கீரையையும் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் நீங்கும்.

16. வெந்தயக் கீரை:
வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தாலும் வெந்தயக் கீரையை பச்சையாகவே அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் அது உள்ளார்ந்து செயல்புரிந்து வயிற்றுப் புண்களை ஆற்றி அதன் பக்க விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் அறவே ஆற்றுகிறது.

17. துளசி இலை:
துளசி இலையுடன் ஒரு ஏலக்காயை சேர்த்து வாய் ழுமுவதும் படும்படி மென்று தின்று வந்தால் இதன் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும்.

18. புதினா, கொத்தமல்லி டீ:
சூடான நீரில் சில கொத்து கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து டீ போல தயாரித்து அத்துடன் எலுமிச்சை சாறு ஒரு கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து டீயாக பருகினாலும் அந்த டீயிலேயே வாய்க் கொப்பளித்தாலும் வாய்ப்புண்ணும் ஆறும். சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு நோயெதிர்ப்பு ஆற்றலை கூட்டி மகத்தான பலன்களையும் தரும்.

19. வெங்காயம்:
வெங்காயத்திற்கு வயிற்றுப் புண்ணையும் வாய்ப்புண்ணையும் ஆற்றும் ஆற்றல் உண்டு. வெள்ளை வெங்காயம் இன்னும் அதிகப் பலன்களைத் தரும். வெள்ளை வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி மிளகுத்தூள் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். இது அற்புத பலன்களைத் தரவல்லது.

20. அத்திக்காய்:
அத்திக்காயில் உள்ள பால் வயிறு தொடர்பான அனைத்து உபாதைகளையும் நீக்குவதோடு வாய்ப்புண்ணையும் குணப்படுத்துகிறது. அத்திகாயுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக தொடர்ந்து சாப்பிட்டு வர சிறந்த பலன்களைப் பெறலாம்.

21 மஞ்சள் மவுத் வாஷ்:
இயற்கையான முறையில் மவுத் வாஷ் வீட்டிலேயே தயாரித்து வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தேவையான பொருட்கள்: 
தண்ணீர் - 200 மிலி
கிளிசரின் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் - 2 அல்லது 3 சிட்டிகை
கிராம்பு - 2
எலுமிச்சை - பாதி மூடி
கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நீரில் போட்டு 200 மிலி 100 மிலி ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்கூடாக இருக்கும் போதே வாய்க் கொப்பளிக்கவும். இந்த இயற்கையான மவுத்வாஷ் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அற்றது. 500 மிலி வரை செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை வைத்திருந்து லேசாக சூடுபடுத்தி பயன்படுத்தலாம்.

22 ஆயில் புல்லிங்:
காலையில் எழுந்ததும் சுத்தமான நல்லெண்ணையை ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் நிரைத்துக் கொண்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் லேசாக கொப்பளித்த படி இருக்கவும். எண்ணை நீர்த்து போன பின்பு உமிழ்ந்து விடவும். பிறகு பல் துலக்கி விடலாம். இந்த முறையை பின்பற்றும் போது தீவிரமான வாய்ப்புற்றினால் ஏற்படும் வாய்ப்புண்கள் கூட குணமாவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. உடல் ஆரோக்கியத்திலும் இந்த எண்ணெய் கொப்பளிப்பால் பல வியக்கத்தக்க மாறுதல்கள் நிகழும்.

இந்த இயற்கையான முறைகளை பின்பற்றுவதோடு தேவையற்ற தீய பழக்கங்களை விடுவதும், அதிக காரமான எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளையும் வெளியிடங்களில் விற்கப்படும் துரித உணவு வகைகளையும் தவிர்த்து நமது இயற்கை அன்னையின் கொடைகளான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதே நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கான தாரக மந்திரம் ஆகும்.