மஞ்சணெத்தி என்றழைக்கப்படும் நுணா மருத்துவம்...

பல் சம்பந்தமான நோய்களை விரைவில் குணப்படுத்தும் நுணா:

நுணா வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

இலை, காய், பழங்கள், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும். மாத விலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப் படுத்தும். பட்டை கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும். வேர், கழிச்சலுண்டாக்கும்.

நுணா இலை நடுவிலுள்ள ஈர்க்குகளை எடுத்து அதனுடன் கரிசலாங்கண்ணி, துளசி, மிளகு, சுக்கு முதலியவற்றை சேர்த்து கஷாயமாக வடித்து குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கால், அரை சங்கு அளவாக விட்டுவர மந்தபேதி நிற்கும்.

நுணா இலையை அரைத்து புண், சிரங்குகளுக்கு வைத்து கட்ட விரைவில் குணமடையும். இதன் இலைச்சாறை எடுத்து இடுப்பு வலிக்கு பூச ஆறும். பூத  கரப்பான் பட்டை, பூவரசம் பட்டை, நுணாப்பட்டை, இலுப்பைப் பிண்ணாக்கு இவைகளை சமனெடையாக சுட்டு கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்து பூச  கரப்பான் நீங்கும்.

புண்கள், சிரங்குகள் குணமாக மஞ்சணத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

நுணா காய்களை ஒரு கிலோ அளவிற்கு சேகரித்து சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 250 கிராம் அளவு கல்உப்பு சேர்த்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு வறுத்து காய்கள் கரியான சமயம் இறக்கி ஆறவைத்து அரைத்து வைத்துக்கொண்டு பல் தேய்த்து வர பல்லரணை, பல்லாட்டம், ஈறுகளில் இரத்தம், சீழ்  சொரிதல், பல்கூச்சம் முதலியவை குணமாகும்.