அம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி!

அம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி! 

நம் சமையல் அறையில் உள்ள பெரும்பாலான சமையல் பொருட்கள் எல்லாம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஏராளமான மூலிகைகளை அதற்குரிய மதிப்பு அறியாமலே கடந்து வந்திருப்போம். வீடுகளில் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்படுகிற ஓமவல்லி இலைகளைப் பற்றியும் அவற்றை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ குணங்களைப் பற்றித் தெரியுமா?

ஓமவல்லிக்கு கற்பூரவல்லி, ஒதப்பன்னா, பாசனபேதி உட்பட ஏராளமான பெயர்கள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த செடி வளர்ந்திடும் தன்மை கொண்டது. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் சுமார் எட்டு மாதங்களில் இந்தச் செடி வளர்ந்திடும். இது தொட்டிகளிலேயே எளிதாக வளர்ந்திடும் மேலும், அதிக கவனிப்பும் இதற்கு தேவைப்படாது, வீட்டில் சிறிய தொட்டியில் வைத்தால் கூட இது வளர்ந்திடும். ஆனால் எட்டு மாதங்களுக்கு பிறகே இதன் பயனை நாம் அனுபவிக்க முடியும். இதன் இலைகள் ஒரு வகை காரத்தன்மையுடனும் தடிப்புடனும் இருக்கும். சதைப்பற்றுள்ள இந்த இலையை பறித்து சுத்தம் செய்து அப்படியே சாப்பிடலாம்.

காய்ச்சல் : 
பெரும்பாலும் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று காய்ச்சல் மற்றும் சளி. இதற்கு ஒவ்வொன்றுக்கும் மாத்திரை, சிரப் என்று மருத்துகள் பின்னால் ஓடுவதற்கு பதிலாக வீட்டிலேயே சில கை மருத்துவத்தை செய்வது உங்களுக்கு மிகச் சிறந்த பயனைத் தரும்.   குழந்தைகளுக்கு இந்த ஓமவல்லி இலைகளை கசக்கி அதன் சாறை குடிக்கச் செய்திடலாம். பெரியவர்கள் இலையை அப்படியே சாப்பிடலாம். தினமும் நான்கைந்து இலைகளை சாப்பிடுவதால் உடனடி பலன் கிடைத்திடும்.

தலைவலி : 
ஒற்றைத் தலைவலி மற்றும் அதிக ஸ்ட்ரெஸினால் ஏற்படக்கூடிய தலைவலியை போக்குவதில் கூட ஓமவல்லி முக்கிய பங்காற்றுகிறது. முதலில் ஓமவல்லியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் பின் இதனுடன் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் சர்க்கரை சிறிதளவு சேர்த்து நன்றாக குழைத்து தலைக்கு பற்றுப் போடு அது சூட்டைத் தணித்து தலைவலியைப் போக்கிடும்.

மார்புச் சளி : 
இரண்டு நாட்கள் கவனிக்கவில்லை என்றால் கூட நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும் அளவிற்கு சளித்தொல்லை பெருகிடும். இதனைத் தடுக்க ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி எடுக்கப்பட்ட இரண்டு மில்லி சாறுடன் எட்டு மில்லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மார்புச் சளியை போக்க உதவிடும்.

அஜீரணம் : 
அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் வாந்தியை போக்க வல்லது. உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் கூட அதனை ஓமவல்லி தீர்க்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தப்படுத்தப் படுகிறது  அதோடு சிறுநீரகப் பிரச்சனை, சிறுநீரகத் தொற்று நீர் கடுப்பு ஆகியவற்றை போக்கவும் பெரிதும் உதவுகிறது.

குடிநீர் : 
சளித்தொல்லை மற்றும் மூக்கடைப்பு இருந்தால் உங்களது அன்றாட வேலையே பெரிதும் பாதிக்கப்படும். அதனை குறைக்க நீங்கள் குடிக்கிற தண்ணீரில் நான்கைந்து ஓமவல்லி இலைகளை போட்டு கொதிக்க வைத்திடுங்கள். இளம் பச்சை நீராக அந்த நீர் மாறிடும். பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இப்படி ஓமவல்லி இலையை போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரிந்திடும்.

அம்மைத் தழும்புகள் : 
அம்மை பாதிப்பு ஏற்பட்டு அதன் தழும்புகள் இருந்தால் அதனைப் போக்க ஓமவல்லி இலையை பயன்படுத்தலாம். ஓமவல்லி இலையை அரைத்து அதனை பற்றுப் போல தழும்புகள் உள்ள இடத்தில் போட வேண்டும். பத்து நிமிடங்கள் போட்டு காய்ந்த பிறகு கழுவிடலாம். அம்மைத் தழும்பு மட்டுமல்லாது கட்டிகள் மற்றும் பருக்களுக்கும் ஓமவல்லி இலைகள் சிறந்த நிவாரணத்தை கொடுத்திடும்.

வெப்பம் : 
காய்ச்சலை குணப்படுத்தும் என்று சொல்லி தினமும் தொடர்ந்து ஓமவல்லி இலைகளை எடுக்க வேண்டாம். ஏனென்றால் ஓமவல்லி இலை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. தொடர்ந்து எடுத்து வந்தால், அது வேறு சில சிக்கல்களை உண்டாக்கிடும்.

வறட்டு இருமல் : 
சிலருக்கு வறட்டு இருமல் இருமும் போது நெஞ்சுப்பகுதி அதிகமாக வலியெடுக்கும். இதனைத் தடுக்கவும் ஓமவல்லி பயன்படுகிறது. ஒரு கொத்து ஓமவல்லி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் கட்டுப்படுத்தப்படும்.

இளைப்பு : 
சிலருக்கு அலர்ஜி மற்றும் வேறு சில காரணங்களால் இளைப்பு ஏற்படுவதை தடுக்க ஓமவல்லியை பயன்படுத்தலாம். ஓமவல்லி கொதிக்க வைத்த நீரைக் குடிப்பது இதற்கு சிறந்த தீர்வாக அமைந்திடும். அதோடு தசை சுருங்குதல் உட்பட பல்வேறு பாதிப்பை தடுத்திடும்.

பசி : 
மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை சீரான உணவு மற்றும் தூக்கம். இவற்றில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு செரிக்கவும், சரியான முறையில் பசி உணர்வினைத் தூண்டவும் ஓமவல்லி பெரிதும் உதவிடுகிறது. ஓமவல்லியை கஷாயமாக்கி குடித்து வர செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை நீங்கிடும்.

புகைப்பழக்கம் : 
புகைப்பிடிப்பவர்கள் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிக்கப்படும். இது தான் காலப்போக்கில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்பூரவல்லி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியளவு எடுத்து வடிகட்டி குடித்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

விஷப்பூச்சி : 
ஓமவல்லி நம் உடலுக்கு மட்டுமல்ல நம்முடைய சுற்றுப்புறத்தைக் கூட சுத்தமாக பயன்படுத்த ஓமவல்லி பெரிதும் உதவிடுகிறது.இது சிறந்த கிருமி நாசினியாக பயன்படும். வீட்டில் இதனை வளர்ப்பதினால் விஷப்பூச்சிகள் வீட்டை அண்டாது. இதிலிருந்து வெளிவரக்கூடிய ஓர் வகை வாசம் கொசு உட்பட பூச்சிகளை விரட்ட உதவிடுகிறது.